என் மலர்
உள்ளூர் செய்திகள்

எம்.ஜி.ஆர். சிலைக்கு கவர்னர் தமிழிசை, முதல் அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விமானம், கப்பல் போக்குவரத்தை மேம்படுத்தும் மத்திய அரசு திட்டத்தில் புதுவை இணைப்பு- கவர்னர் தமிழிசை தகவல்
விமானம், கப்பன் போக்குவரத்தை மேம்படுத்தும் மத்திய அரசு திட்டத்தில் புதுவை இணைக்கப்பட்டுள்ளதாக கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொணடாடப்பட்டது. விழாவையொட்டி புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு கவர்னர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்ததினார்.
தொடர்ந்து முதல்- அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி.ரமேஷ், ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கரன் ஆகியோரும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்கிறோம். நான் பார்த்த வகையில் ஒரு மனித நேயம் மிக்க தலைவர். காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை குழந்தைகளுக்கும் நீட்டித்தவர்.
மத்திய மந்திரி நிதின் கட்கரி தலைமையில் நாட்டு முன்னேற்றங்களை விரிவுபடுத்துவதற்கு வேகசக்தி என்ற திட்டத்தை தொடங்கி உள்ளனர். நாட்டின் 18 துறைகள் ஒன்றிணைந்து எப்படி இந்தியா முழுவதும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது என திட்டமிடப்படுகிறது. இந்த திட்டத்தில் புதுவையும் சேர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதற்கான இணைய வழி மாநாட்டில் நானும், முதல்-அமைச்சர் ரங்கசாமியும் பங்கேற்கிறோம். இது புதுவைக்கு மிகப்பெரிய பெருமை. புதுவைக்கு சாலை, விமானம், கப்பல் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. இதன் மூலம் புதுவை, காரைக்காலில் துறைமுக விரிவாக்கம், அதிக சாலைகள் அமைப்பது, விமான போக்குவரத்து மேம்பாடு போன்றவை பலப்படுத்தப்படும்.
ஒட்டுமொத்த புதுவை வளர்ச்சிக்கு இந்த நாள் அமைந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ரூ.100 லட்சம் கோடி பிரதமர் முதலீடு செய்ய உள்ளார். இதில் புதுவை மிக முக்கிய இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.
Next Story