search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    வெளிநாட்டிற்கு இருமல் மருந்து கடத்த முயன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

    போதைக்காக வெளிநாட்டிற்கு இருமல் மருந்து கடத்த முயன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் சோலையப்பன் (வயது 69). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு திருச்சியில் இருந்து விமானத்தில் மலேசியா செல்ல இருந்தார். விமான நிலையத்தில் அவரது உடமைகளை இமிக்கிரேசன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். 

    அப்போது, 95 இருமல் மருந்து பாட்டில்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை விமானத்தில் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. பொதுவாக இருமல் மருந்தில் சிறிதளவு ஆல்கஹால் கலந்து இருக்கும். 

    அதனை குறிப்பிட்ட அளவு மட்டுமே தனி நபர் பயன்படுத்த வேண்டும். அதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் போதையாகிவிடும். சோலையப்பன் கொண்டு செல்ல முயன்ற இருமல் மருந்திற்கு டாக்டர் பரிந்துரை கடிதம் உள்பட எந்தவொரு ஆவணமும் இல்லை. 

    அவர் அதனை மலேசியாவுக்கு கடத்தி செல்ல இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சோலையப்பனை போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். 

    மேலும் இருமல் மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அந்த மருந்து பாட்டில்களை மலேசியாவில் ஒருவரிடம் கொடுப்பதற்காக குருவி போல அவர் செயல்பட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இந்த வழக்கு புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குருமூர்த்தி, தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில்,  சோலையப்பனுக்கு 2 பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் தலா 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். 

    இதைத்தொடர்ந்து சோலையப்பனை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
    Next Story
    ×