என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
எருது விடும் விழாவில் அசம்பாவிதம் ஏற்பட்டால் விழாக்குழுவினரே பொறுப்பு
எருது விடும் விழாவில் அசம்பாவிதம் ஏற்பட்டால் விழாக்குழுவினரே பொறுப்பு என்று வேலூர் கலெக்டர் அறிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 22 புதிய கட்டுப்பாடுகளுடன் விழாவை நடத்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அனுமதியளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எருது விடும் விழாவில் பங்கேற்கும் காளையின் உரிமையாளர், ஒரு உதவியாளர் என இருவரும் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அல்லது 2 நாட்களுக்கு முன்பாக கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும்.
இவர்களுக்கு மட்டுமே வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை இல்லாத நபர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய முடியாது.
போட்டியில் பங்கேற்கும் காளைகளின் பதிவுகளை 3 நாட்களுக்கு முன்பே முடித்திருக்க வேண்டும். காளையின் உரிமையாளர், உடன் வரும் உதவியாளர் பெயரை பதிவு செய்ய வேண்டும். எருது விடும் விழா 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கப்படும்.
எருது விடும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வீரர்களும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்று அல்லது 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனையின் நெகட்டிவ் சான்று பெற்றால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
விழா அரங்கிற்கு வெளியே பார்வையாளர்கள் 150 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். பார்வையாளர்களும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும். விழா நடத்த அரசின் முன் அனுமதி பெற்று வழிகாட்டு நெறிமுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
விழாக்குழுவினர் முன்னெச்சரிக்கை காப்பு நிதியாக ரூ.10 ஆயிரம் தொகையை மாவட்ட ஆட்சித் தலைவர், வேலூர் என்ற பெயரில் இந்தியன் வங்கியில் மாற்றத்தக்க வகையில் வரைவோலை எடுத்து சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
விழாவுக்கான மொத்த நிகழ்ச்சியும் காப்பீடு செய்யப்பட்டு அதற்கான ஆவணத்தை வருவாய் கோட்டாட்சியர் வசம் ஒப்படைக்க வேண்டும். ரூ.1 கோடிக்கான காப்பீடுத் தொகையாக ரூ.11,840&ம், எருதுகளுக்கு ரூ.75 ஆயிரத்துக்கான காப்பீட்டுத் தொகையாக ரூ.3,611 செலுத்த வேண்டும். எருது விடும் விழாவில் ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கு தலா ரூ.5 லட்சம், எருதுகளுக்கு தலா ரூ.75 ஆயிரம் வழங்கப்படும்.
காப்பீடு குறித்த விவரங்களுக்கு 0416-226651 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
எருதுவிடும் விழா நிகழ்ச்சியின்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு தாங்களே முழு பொறுப்பு என்பதற்கான உத்தரவாத பத்திரத்தை விழாக்குழுவினர் வருவாய் கோட்டாட்சியர் வசம் சமர்ப்பிக்க வேண்டும்.
விழாவில் பங்கேற்பவர்கள் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். விழா நடைபெறும் பகுதியில் இருந்து 5 கி.மீ சுற்றளவில் திறந்தவெளி கிணறுகள் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து மூட வேண்டும்.
ரெயில்வே தண்டவாளங்கள், எரிவாயு கிடங்குகள், பெட்ரோல் பங்க், மின்மாற்றிகள், சாலைகளின் குறுக்கே செல்லும் வயர்கள் எதுவும் இல்லை என்பதை விழாக்குழுவினர் உறுதி செய்ய வேண்டும்.
விழா நிகழ்ச்சி முழுவதையும் சி.சி டிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும். அரசால் அறிவிக்கப்படும் முழு ஊரடங்கு காலங்களில் எருதுவிடும் விழா நடத்த அனுமதி இல்லை.
வரும் 14&ந் தேதி முதல் 18-ந் தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எருது விழாவை காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணிக்குள் முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 22 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதலை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story






