search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை மறியல்
    X
    சாலை மறியல்

    விபத்தில் அதிகாரி பலி: விபத்துக்கு காரணமான வாகனத்தை கண்டுபிடிக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

    தனியார் நிறுவன நிதி மேலாளர் விபத்தில் உயிரிழந்த நிலையில், விபத்துக்கு காரணமாக வாகனத்தை கண்டுபிடிக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் தமிழ் அழகன்(வயது 32). கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் நிதி மேலாளராக பணிபுரிந்து வந்த இவர் சம்பவத்தன்று பணம் வசூல் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் பாவளம் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.

    இந்த விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை விபத்தில் பலியான தமிழ் அழகனின் உருவ படத்துடன் கூடிய பதாகையுடன் உறவினர்கள் தேவபாண்டலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திரண்டனர்.

    பின்னர் அவர்கள் தமிழ் அழகனின் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டுபிடிக்கக்கோரி சங்கராபுரம்- திருவண்ணாமலை சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விபத்துக்கு காரணமான வாகனத்தை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.

    இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக சங்கராபுரம்- திருவண்ணாமலை சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×