என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்துக்குள்ளான தனியார் பஸ்கள்.
    X
    விபத்துக்குள்ளான தனியார் பஸ்கள்.

    புதுவை இந்திராகாந்தி சதுக்கத்தில் விபத்து- தடுப்பு கட்டையில் மோதிய தனியார் பஸ்

    புதுவை இந்திராகாந்தி சதுக்கத்தில் தடுப்பு கட்டையில் பஸ் மோதி 6 பயணிகள் காயம் அடைந்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை இந்திராகாந்தி சதுக்கத்தில் தனியார் பஸ் தடுப்பு கட்டையில் மோதி மற்றொரு பஸ் மீது மோதிய விபத்தில்  6 பயணிகள் காயமடைந்தனர்.

    மதகடிப்பட்டில் இருந்து ஒரு தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுவைக்கு வந்து கொண்டி ருந்தது. அந்த பஸ் இந்திராகாந்தி சிலை சிக்னலை கடந்து சென்றது. அப்போது பின்னால் பயணிகளை ஏற்றிக் கொண்டு மற்றொரு தனியார் பஸ்சும் வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் திடீரென சைக்கிளில் வந்த ஒருவர் ரோட்டை கடக்க முயன்றதால் அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பினார். 

    இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி அந்த வழியாக முதலியார்பேட்டை விடுதலை நகரை சேர்ந்த அமுதா (வயது32) என்ற பெண் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் முன்னால் சென்ற பஸ் மீதும் மோதி நின்றது. 

    இதில் அதிர்ஷ்டவசமாக மோட்டார் சைக்கிளில் வந்த அமுதா சிறிய சிராய்ப்பு காயத்துடன் உயிர் தப்பினார். அதே வேளையில் பின்னால் வந்த பஸ்சில் பயணம் செய்த மூலக்குளத்தை கமலபிரியன் உள்பட 6 பயணிகள் காயமடைந்தனர். இவர்களில் 3 பேர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிலும், 2 பேர் ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும், ஒருவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தவிபத்து காரணமாக இந்திராகாந்தி சிலை அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×