என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்து பலி
செம்பனார்கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலி
செம்பனார்கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொறையாறு:
திருவெண்காடு அருகே திருவாலி கிராமத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வன் (வயது 38), விவசாயியான இவர் நேற்று முன்தினம் செம்பனார்கோவில் அருகே பொன்செய் கிராமத்தில் இருந்து தனது வீட்டிற்கு வலத்தான்பட்டினம் மெயின்ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென அன்புச்செல்வன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்புச்செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை ஓட்டி சென்றது யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






