search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை ரெயில்வே கேட் அருகில் குண்டும் குழியுமாக உள்ள  ராமசாமி நகர் சாலை.
    X
    உடுமலை ரெயில்வே கேட் அருகில் குண்டும் குழியுமாக உள்ள ராமசாமி நகர் சாலை.

    உடுமலையில் சேதமடைந்த சாலைகளால் விபத்து அபாயம்

    நகரின் முக்கிய போக்குவரத்து மையமான தளி ரோடு சிக்னல் பகுதியில் சாலை முற்றிலுமாக அரிக்கப்பட்டு காணாமல் போயுள்ளது.
    உடுமலை:

    கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை உடுமலை நகரின் மையப்பகுதியில் செல்கிறது. நகரில்  தாராபுரம், பல்லடம் மாநில நெடுஞ்சாலைகளும், தளி, கொழுமம் உட்பட மாவட்ட முக்கிய  சாலைகளும்  தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகின்றன.போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சந்திப்பு பகுதிகளில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில்லை. 

    பருவமழைக்காலத்தில் அனைத்து சாலைகளிலும் மழை நீர் வெள்ளமாக சென்று, அரிப்பு ஏற்பட்டது. குண்டும், குழியுமாக பல இடங்கள் மாறியுள்ளன. ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் இதுவரை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை.

    குறிப்பாக நகரின் முக்கிய போக்குவரத்து மையமான தளி ரோடு சிக்னல் பகுதியில் சாலை முற்றிலுமாக அரிக்கப்பட்டு காணாமல் போயுள்ளது.மேடு, பள்ளமாக சந்திப்பு பகுதி மாறியுள்ளதால் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரியும், இருசக்கர வாகன ஓட்டிகள் தளி ரோட்டில் திரும்பும் போது நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.

    பிற வாகனங்களும் திரும்புவதற்கு சிரமமாக இருப்பதால் சிக்னல் பகுதியில் போக்குவரத்து பாதிக்கிறது.அருகிலேயே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பல்லடம் மாநில நெடுஞ்சாலை பிரியும் பகுதியும் இதே நிலையில் உள்ளது.

    சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தவிர்க்க பல்வேறு வழிகாட்டுதல்களை அரசு வழங்கி வரும் நிலையில் நகரில் நீண்ட காலமாக நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாதது வாகன ஓட்டிகளை வேதனையடைய செய்துள்ளது. எனவே தொடர் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளில்  சீரமைப்புப்பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை ரெயில்வே கேட்டில் இருந்து ராமசாமி நகர் செல்லும் வழியில் ரெயில்வே கேட்டில் தெற்கு பகுதியில் சாலை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து ராமசாமி நகர் வரை சாலை குண்டும் குழியுமாக உள்ளது. சாலை முழுவதும் பெயர்ந்து வாகனங்கள் செல்லும் போது புழுதியால் பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். இதனால் நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் தினமும் இந்த குழியான பகுதியில் தடுமாறி செல்ல வேண்டியுள்ளது. 

    இருசக்கர வாகனங்களில் குழந்தைகளோடு வருபவர்கள் சில நேரம் தடுமாறி கீழே விழும் நிலையில் உள்ளது. பல்வேறு அமைப்புகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் இதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. 

    எனவே அதிகப்படியான விபத்துகள் ஏற்படும் முன்பு இந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தவிர குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட குழிகளும் தெற்குப் பகுதி வரை மூடப்படாமல் உள்ளது. 

    இதனால் அந்த குழிகளிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர்.மேலும் இந்த பாதை வழியாகத்தான் உடுமலை அரசு கல்லூரி மற்றும் எலையமுத்தூர், குரல்குட்டை, உடுமலைவட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் செல்லும் மாற்று பாதையாக உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
    Next Story
    ×