என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொங்கல் பண்டிகையையொட்டி உடுமலை பகுதியில் மண்பானைகள் தயாரிப்பு பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.
பொங்கல் பண்டிகையையொட்டி உடுமலையில் மண்பானைகள் உற்பத்தி பணிகள் மும்முரம்
கார்த்திகை மாதத்தில் திருவிளக்குகளும், தை மாதத்திற்கு பொங்கல் பானைகளும் தயார் செய்கின்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் காங்கயம், அவினாசி, உடுமலை ஆகிய பகுதிகளில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்குகள், மண் அடுப்புகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் கோவிலில் வைக்கும் உருவ பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகின்றனர்.
குறிப்பாக கார்த்திகை மாதத்தில் திருவிளக்குகளும், தை மாதத்திற்கு பொங்கல் பானைகளும் தயார் செய்கின்றனர். தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி உடுமலை பகுதியில் பொங்கல் பானைகள் உற்பத்தியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
விதவிதமான வடிவங்களில் பொங்கல் பானைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தயாரித்து கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு மண்பானையும் ரூ.100 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை யொட்டி தமிழக அரசு ரேசன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க உள்ளது. அதனுடன் பொங்கலிட மண்பானைகளை வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் மூலம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். எனவே இக்கோரிக்கையை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story