search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட பணிகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.
    X
    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட பணிகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

    இந்தாண்டு முதல் மாணவர் சேர்க்கை-திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி இறுதிக்கட்ட கட்டிட பணிகள் தீவிரம்-எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக குழுவினர் ஆய்வு

    மருத்துவ கல்லூரியின் 6 தளங்களுக்கான லிப்ட், மின் இணைப்பு, கழிப்பிடம், டைல்ஸ், கிரானைட் கல் நிறுவுதல், குடிநீர் குழாய் பொருத்துவது உள்ளிட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.
    திருப்பூர்:

    மத்திய அரசு நிதி ரூ.193 கோடி, மாநில அரசு நிதி ரூ.141 கோடி என ரூ.334 கோடி மதிப்பில் திருப்பூர்  தாராபுரம் ரோட்டில் 11.28 ஏக்கரில் மருத்துவ கல்லூரி கட்டுமான பணி கடந்தாண்டு செப்டம்பரில் தொடங்கியது.

    கொரோனா இரண்டாவது அலை ஊரடங்கு அறிவிப்பின்போது கட்டுமான பணி சற்று மந்தமாகியது. ஜூனில் பணிகள் மீண்டும் வேகமெடுத்தது. குறிப்பாக மத்திய மருத்துவப்பணிகள் துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு நடத்தியதால் இரவு, பகலாக பணி நடந்தது.

    தற்போது மருத்துவகல்லூரி வகுப்பறை , ஆய்வகம், கூட்ட அரங்கம்,வீடியோ கான்பரன்ஸ் ஹால், முகப்பு கட்டிடம், துறை சார் உயரதிகாரிகளுக்கான அறை உள்ளிட்ட பணி நிறைவு பெற்றுள்ளது.

    மருத்துவ கல்லூரியின் 6 தளங்களுக்கான லிப்ட், மின் இணைப்பு, கழிப்பிடம், டைல்ஸ், கிரானைட் கல் நிறுவுதல், குடிநீர் குழாய் பொருத்துவது உள்ளிட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. 90 சதவீத கட்டுமான பணி முடிந்துள்ளதால் கல்லூரி முகப்பில் தமிழக அரசு முத்திரையுடன் கூடிய தமிழ் மற்றும் ஆங்கிலத்திலான பெயர் பலகை பொருத்தப்பட்டது.

    மருத்துவமனைக்கான டீன், துறை சார் பேராசிரியர், மருத்துவ மாணவர்களுக்கான விடுதி, கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணி நிறைவை எட்டியுள்ளது. தரைத்தளம், பார்க்கிங், சுற்றுச்சுவர், தளங்களின் முகப்பில் கண்ணாடி பொருத்தும் பணி சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.

    சுற்றிலும் சுவர் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கப்பட உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்  திருப்பூர் மருத்துவ கல்லூரியில் 150 இடங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது.

    மத்திய சுகாதாரத்துறையின் அனுமதி பெற்று திறப்பு விழா நடக்கும் தேதி அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே திருப்பூர் மருத்துவ கல்லூரியில் உருவாக்கப்பட உள்ள  துறை, நியமிக்கப்பட உள்ள அதிகாரிகள் குறித்து சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை குழு ஆய்வு நடத்தியது.

    சென்னை எம்.ஜி.ஆர்., பல்கலைக்கு உட்பட்டு திருப்பூர் மருத்துவ கல்லூரி  வருகிறது.  நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் சென்னை எம்.ஜி.ஆர்., பல்கலை மருத்துவ அலுவலர்கள் குழுவினர் திருப்பூர் மருத்துவ கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    புதியதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை, ஆய்வகம், விடுதி உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். ஆய்வு செய்த குழுவினர் கூறியதாவது:-

    உயிர் இயக்கியல், உயிர் வேதியியல் மற்றும் உடற் கூறாய்வு உள்ளிட்ட 25 துறைகள் மருத்துவக்கல்லூரியில் உருவாக்கப்பட்டுள்ளன. அனைத்து துறைகளுக்கும் பேராசிரியர்2பேர், இணை பேராசிரியர்கள் 12 பேர், உதவி பேராசிரியர்கள் 28 பேர், முதுநிலை டாக்டர் 19 பேர், இளநிலை டாக்டர் 27 பேர், பேராசிரியர்கள் 14 மற்றும் உதவி அறுவை சிகிச்சையாளர் 40  பேர் என மொத்தம் 190 பேர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நீட்தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில், ரேங்க் பட்டியல் வெளியானதும் அட்மிஷன் குறித்த அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×