என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பல்லடத்தில் அதிகம் பேர் விண்ணப்பம்
வாக்குச்சாடிகள், தாலுகா அலுவலகங்களில் இன்று பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்வதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர்:
நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகள் மாவட்டம் தோறும் நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந்தேதி வெளியிடப்பட்டது.
இதையடுத்து அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் முகாம் நடந்தது. கடந்த 13 ,14, 20 , 21, 27, 28ஆகிய 6 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் 2,512 ஓட்டுச்சாவடி மையங்களில் 6நாட்கள் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 31,789 பேர், படிவம் 6 விண்ணப்பித்துள்ளனர்.
பெயர் நீக்கத்துக்கு 11,768 பேர், பட்டியலில் திருத்தம் செய்வதற்காக 4,425 பேர், முகவரி மாற்றத்துக்காக 4,425 பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 52 ஆயிரத்து 674 பேர் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அதிகபட்சமாக பல்லடத்தில் 6,364 பேர் விண்ணப்பித்துள்ளனர். திருப்பூர் வடக்கு தொகுதியில் 4,760 பேர்,உடுமலையில் 3,906 பேர்,திருப்பூர் தெற்கில் 3,853 பேர், காங்கயத்தில் 3,805 பேர், அவிநாசியில் 3,775 பேர், தாராபுரம் தொகுதியில் 2,771 பேர், மடத்துக்குளத்தில் 2,555 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சிறப்பு முகாம் முடிவடைந்துள்ள போதும் அந்தந்த வாக்குச்சாடிகள், தாலுகா அலுவலகங்களில் இன்று பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்வதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story