search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராதாகிருஷ்ணன்
    X
    ராதாகிருஷ்ணன்

    ஒமிக்ரான் பரவினால் உயிரிழப்பு அதிகரிக்கும்- ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

    கொரோனா தற்போது கட்டுக்குள் வந்து விட்டதாக பலரும் அலட்சியமாக முக கவசம் அணியாமல் செல்வதை பார்க்க முடிகிறது. இது மிகப்பெரிய தவறாகும் என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.
    சென்னை:

    தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’ மிக வேகமாக வெளிநாடுகளில் பரவி வருகிறது.

    இந்த புதிய வைரஸ் இந்தியாவுக்குள் பரவி விடாமல் தடுக்க மத்திய அரசு அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    இதுகுறித்து தமிழக அரசுக்கும், மத்திய அரசு கடிதம் எழுதி உஷார்படுத்தி உள்ளது.

    இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து ‘ஒமிக்ரான்’ வகை கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், விமான நிலைய இயக்குனர்கள் சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    முக கவசம்

    இதுபற்றி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    கொரோனா தற்போது கட்டுக்குள் வந்து விட்டதாக பலரும் அலட்சியமாக முக கவசம் அணியாமல் செல்வதை பார்க்க முடிகிறது. இது மிகப்பெரிய தவறாகும். எந்த ஒரு வைரசும் நம்மை தாக்காமல் இருக்க வேண்டுமானால் முக கவசம்தான் பாதுகாக்கும். எனவே கண்டிப்பாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.

    தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதியதாக உருமாறி வந்துள்ள ஒமிக்ரான் வைரஸ் பல நாடுகளில் வேகமாக பரவி விட்டது. இன்னும் இந்தியாவிற்குள் நுழையவில்லை.

    ஆனாலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஏனென்றால் அது போன்ற வீரியமிக்க வைரஸ் பரவினால் அதன் எதிர்விளைவுகள் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். அதிக உயிரிழப்பு கூட உருவாக்கி விடும்.

    இதை கருத்தில் கொண்டு கொரோனா காலத்தில் நாம் மேற்கொண்ட அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதும் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.

    இப்போதுள்ள சூழலில் கொரோனாவுக்குதான் தடுப்பூசி உள்ளது. இதில் 2 தவணை தடுப்பூசி போடாதவர்கள் இன்னும் பலர் உள்ளனர். அவர்களையும் கண்டறிந்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு தவணை தடுப்பூசி போடாதவர்களும் விரைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    முன் எச்சரிக்கையாக வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை நடத்தப்படுகிறது.

    தென்ஆப்பிரிக்கா, ஐரோப்பா, பிரேசில், வங்காளதேசம், போட்ஸ் வானா, மொரிசீயஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு வைரஸ் தொற்று இல்லாவிட்டாலும் சொல்லும் அறிவுரை என்னவென்றால், அரசு சொல்லும் வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுங்கள். கண்டிப்பாக முககவசம் அணிந்து சொல்லுங்கள், தனி நபர் இடைவெளி, தனி நபர் சுகாதாரம் ஆகியவற்றை மிகச்சரியாக கடைபிடியுங்கள். இதுதான் முக்கியம்.

    தற்போது மழை காலமாக இருப்பதால் காய்ச்சிய தண்ணீரை அனைவரும் குடிக்க வேண்டும். வயிற்றுபோக்கு போன்ற உடல் உபாதைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×