என் மலர்
செய்திகள்

தேவிபட்டினம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை - பரபரப்பு தகவல்கள்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள தாவுகாடு பகுதியைச் சேர்ந்தவர் கோகுலராஜ் (வயது24). இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை உள்ளது.
கோகுலராஜின் பெரி யப்பா சுப்பிரமணி மகன் கோபாலகிருஷ்ணன் (24). இவர் அப்பகுதியில் பனை மட்டையில் இருந்து தும்பு உற்பத்தி செய்யும் தொழில் செய்து வந்தார். இவரிடம் கோகுலராஜ் வேலை செய்து வந்தார்.
கோபாலகிருஷ்ண னுக்கும், கோகுலராஜின் மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கள்ளக்காதலர்கள் இருவரும் ஊரைவிட்டு வெளியேறி வெளியூர் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த கோகுலராஜ் மற்றும் குடும்பத்தினர் 2 பேரையும் தேடி கண்டுபிடித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இருவரையும் கண்டித்த குடும்பத்தினர் மீண்டும் கோகுல ராஜூடன் முத்துலட்சுமியை சேர்த்து வைத்தனர். இதனால் கோபாலகிருஷ்ணன் மீது கோகுலராஜ் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
நேற்று புதுவலசை பகுதியில் கோபால கிருஷ்ணன் சென்று கொண்டிருந்தார். அப்போது கோகுலராஜ் மற்றும் அவரது உறவினரான விஜயகுமார் உள்பட சிலர் வழிமறித்து கோபாலகிருஷ்ணனை அரிவாளால் வெட்டினார்கள்.
இதைப்பார்த்த அவரது சகோதரி இசக்கியம்மாள் (32) தடுக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த கும்பல் வெட்டியது. கொலை கும்பல் பிடியில் இருந்து கோபாலகிருஷ்ணன் தப்ப முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த தேவிபட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அரிவாள் வெட்டில் காயமடைந்த இசக்கியம்மாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகி விட்டனர். அந்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தேவி பட்டினம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.