search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் மழையால் தக்காளி செடிகளிலேயே அழுகியுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    தொடர் மழையால் தக்காளி செடிகளிலேயே அழுகியுள்ளதை படத்தில் காணலாம்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை: செடிகளிலேயே அழுகும் தக்காளி

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக விவசாய நிலங்களில் செடிகளிலேயே தக்காளிகள் அழுகி வருகிறது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை, காவேரிப்பட்டணம், சூளகிரி, கெலமங்கலம், பேரிகை, பாகலூர், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு சாகுபடியாகும் தக்காளி ராயக்கோட்டை தக்காளி மார்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கமிஷன் மண்டிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. பின்னர் அங்கிருந்து தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக தக்காளி செடிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பூக்கள் மற்றும் பிஞ்சுகள் மழையால் உதிர்ந்து செடிகளில் உள்ள இலைகளும் அழுகி உள்ளது. இதனால் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் வரை செலவு செய்து ஒரு ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்த விவசாயிக்கு முற்றிலுமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    ராயக்கோட்டையில் உள்ள தக்காளி மண்டிகளில் இருந்து மட்டும் நாள் ஒன்றுக்கு 800 டன் வரை ஏற்றுமதி செய்யப்பட கூடிய நிலையில், தற்போது தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளதால் வரத்து குறைந்து சுமார் 50 டன் அளவிற்கு மட்டுமே தக்காளி வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடுக்கு தக்காளி ஏற்றுமதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டதால் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது.

    இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறுகையில், தக்காளியின் விலை உயர்ந்தாலும் தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு தக்காளி சாகுபடி விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
    Next Story
    ×