search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் பைபர் படகில் மீட்டு கொண்டு வரப்பட்ட காட்சி.
    X
    வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் பைபர் படகில் மீட்டு கொண்டு வரப்பட்ட காட்சி.

    புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

    வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இந்த மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென் கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை தமிழகத்தில் சில இடங்களில் கன மழையும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, இன்று நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    தெற்கு வங்க கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக நாளை (புதன்கிழமை) டெல்டா மாவட்டங்கள், கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும், தமிழகத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    நாளை மறுதினம் (வியாழக்கிழமை) கடலூர், விழுப்புரம், சென்னை, புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும் பெய்யக்கூடும்.

    12-ந்தேதி வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் நாளை மறுதினம் வரை சூறாவளி காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் 9-ந்தேதிக்குள்(இன்று) கரை திரும்ப வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கின்றனர்.

    Next Story
    ×