என் மலர்
செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர் மீது கொலைவெறி தாக்குதல் - மனைவி உள்பட 4 பேர் மீது வழக்கு
கோபி:
கோபிசெட்டிபாளையம் கூகலூர் ராஜா தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (44). இவர் கூகலூர் அரசு நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி கிருத்திகா. இவர்களுக்கு நிஷாந்த் குமார் (11) என்ற மகன் உள்ளார்.
கிருத்திகா குள்ளம் பாளையத்தில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கிருத்திகா புதுப்பாளையம் என்ற பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 9.30 மணியளவில் புதுப்பாளையம் பஜனை கோவில் வீதியில் உள்ள கிருத்திகா வீட்டிற்கு பாலகிருஷ்ணன் சென்றார்.
அப்போது ஆப்பக்கூடலை சேர்ந்த கிருத்திகாவின் அத்தை மகன் குமார் என்கிற சரவணகுமார், பொம்ம நாயக்கன் பாளையத்தை சேர்ந்த முரளி, கிருத்திகா மற்றும் கூகலூரை சேர்ந்த பிரகலாதன் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
அப்போது கிருத்திகாவுடன் இருந்த 3 பேரும் உன் கூட வாழ வரவில்லை என்றால் விட்டுட்டு போக வேண்டியது தானே என்று ஆபாசமாக பேசினர். அப்போது சரவணகுமார், கிருத்திகா ஆகியோர் பாலகிருஷ்ணனை கீழே பிடித்து தள்ளினர். மேலும் சரவணகுமார் முகம், வாய், முதுகு ஆகிய இடங்களில் தாக்கினார். மேலும் அவர்களுடன் சேர்ந்து முரளி, பிரகலாதன் ஆகியோரும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து பாலகிருஷ்ணன் கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பாலகிருஷ்ணனின் மனைவி கிருத்திகா மற்றும் குமார் என்கிற சரவணகுமார், முரளி, பிரகலாதன் ஆகிய 4 பேர் மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






