search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமல்லபுரம் கடற்கரையில் திரண்ட சுற்றுலா பயணிகள்.
    X
    மாமல்லபுரம் கடற்கரையில் திரண்ட சுற்றுலா பயணிகள்.

    மாமல்லபுரம் கடற்கரையில் தடையை மீறி குவிந்த சுற்றுலா பயணிகள்

    மாமல்லபுரம் கடற்கரையில் தடையை மீறி குவிந்த சுற்றுலா பயணிகள் பலர் கடல் சீற்றத்துக்கு மத்தியில் ஆபத்தை உணராமல் கடலில் குளித்து மகிழ்ந்ததை காண முடிந்தது.
    மாமல்லபுரம்:

    கொரோனா 3-வது அலை பரவலை தடுக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு ஞாயிற்றுகிழமைகளில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று வார விடுமுறை தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். இதனால் கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன பகுதிகளில் சுற்றுலா வந்த பயணிகளின் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக நேற்று காலை 8 மணிக்கு கடற்கரை கோவிலுக்கு சென்று திரும்பிய பயணிகள் பலர் கடற்கரை செல்ல முற்பட்டனர்.

    ஆனால் நடைபாதைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டு தடை ஏற்படுத்தப்பட்டு இருந்ததால் கடற்கரைக்கு செல்வதை தவிர்த்துவிட்டு ஏமாற்றத்துடன் பலர் வீடு திரும்பினர். பிறகு 11 மணிக்கு மேல் வந்த சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்தது.

    கூட்டம், கூட்டமாக வந்த சுற்றுலா பயணிகள் பலர் கடற்கரை சாலையில் வைக்கப்பட்டிருந்த சாலை தடுப்புகளை தூக்கி வீசிவிட்டு அந்த வழியாக சென்று கடற்கரையில் குவிந்தனர். நேற்று பலத்த கடல் சீற்றத்துக்கு மத்தியில் ஆபத்தை உணராமல் பலர் தங்கள் குழந்தைகள், சிறுவர்களுடன் கடும் வெயிலின் தாக்கத்தை தணிக்க கடலில் இறங்கி குளித்து கொண்டிருந்ததை காண முடிந்தது. கடல் நேற்று 5 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கி இருந்ததால் ராட்சத அலைகள் சீறி பாய்ந்து வந்த நிலையில் கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது. அதனால் அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் சுற்றுலா பயணிகளை பலமுறை எச்சரித்தும் அதனை யாரும் காதில் வாங்கி கொள்ளாமல் அலட்சி யமாக கடலில் குளித்து கொண்டிருந்தனர்.

    கடற்கரைக்கு வந்த பயணிகளால் கடற்கரைக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட சங்குமணி கடை, தேனீர் கடைகள் உள்ளிட்ட கடைகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு வியாபாரம் களைகட்டி காணப்பட்டது. கொரோனா ஊரடங்கு, கடற்கரைக்கு தடை உள்ளிட்ட காரணங்களால் மாமல்லபுரத்தில் அதிக அளவு வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட கடற்கரை சாலை வியாபாரிகள் நேற்று வந்த பயணிகள் மூலம் தங்கள் கடைகளில் வியாபாரம் நடைபெற்ற மகிழ்ச்சியில் பலர் உற்சாகத்துடன் காணப்பட்டனர். மேலும் தங்கள் வாழ்வாதாரம் காக்க வழிகாட்டி நெறிமுறைகளுடன் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.

    மேலும் கொரோனா தடுப்பு முறைகளை மேற்கொண்டு வரும் மாமல்லபுரம் பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை நிர்வாகம் நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் கடற்கரை கோவில் நுழைவு வாயில் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தியது. இந்த முகாம் நடைபெற்ற இடத்திற்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் திரளானோர் வந்து தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்துவிட்டு கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு சென்றனர். கடற்கரை கோவில் நுழைவு வாயிலில் ஒலிபெருக்கி மூலமும் கொரோனா தடுப்பூசி பேட்டுக்கொள்ள சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருந்ததை காண முடிந்தது.
    Next Story
    ×