search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பெண் ஊழியர்களை போட்டோ எடுத்து டுவிட்டரில் பதிவிட்ட வருவாய் ஆய்வாளர் கைது

    ஈரோடு ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பெண் ஊழியர்களை போட்டோ எடுத்து டுவிட்டரில் பதிவிட்ட வருவாய் ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 5-வது தளத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தில் சிவகிரி கொல்லாங்கோவில் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 33) என்பவர் சீனியர் வருவாய் ஆய்வாளராக கடந்த 2014-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.

    சதீஷ்குமார் அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் பெண் ஊழியர்கள் மற்றும் அலுவலகத்துக்கு வரும் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்து அதை டுவிட்டரில் பதிவேற்றி வந்துள்ளார்.

    இதனை பார்த்த சம்பந்தப்பட்ட பெண் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் ஊழியரின் பெற்றோர் இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் சதீஷ்குமாரின் டுவிட்டரை ஆய்வு செய்தனர். அப்போது பெண் ஊழியர்களின் படம் பதிவேற்றி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சதீஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவர் மீது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் செயல்படுவது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதகுறித்து சைபர் கிரைம் போலீசார் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கையாக சதீஷ்குமாரை சஸ்பெண்டு செய்து மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×