search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வாழப்பாடி அருகே அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்திய 20 பேர் மீது வழக்கு - 2 பேர் கைது

    மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அரசு அனுமதி மற்றும் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி வாடிவாசல் அமைத்து ஜல்லிக்கட்டு நடத்தினர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழாவில் மாடுபிடி வீரராக கலந்து கொள்வதிலும், காளைகளை வளர்த்து ஜல்லிக்கட்டில் பங்கேற்கச் செய்வதிலும், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    கொரோனா பெருந்தொற்று பரவலால் ஜல்லிக்கட்டு ரத்து செய்யப்பட்டது. எனினும் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் அரசு அனுமதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமின்றி ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்ந்து வருகிறது.

    ஜூலை மாதம் வாழப்பாடி அடுத்த கருமாபுரம் மற்றும் வேப்பிலைப்பட்டி புதூர் கிராமத்திலும், கடந்த மாதம் வாழப்பாடி அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்திலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் ஜல்லிக்கட்டை தடுத்து நிறுத்தினர். அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்திய இளைஞர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில், நேற்று மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அரசு அனுமதி மற்றும் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி வாடிவாசல் அமைத்து ஜல்லிக்கட்டு நடத்தினர்.

    இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து, வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜல்லிக்கட்டு நடத்தியவர்களை விரட்டி அடித்தனர். இது குறித்து 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக தமையனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் (36), சிங்கிபுரம் பார்த்தசாரதி (24) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×