search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரங்கசாமி
    X
    ரங்கசாமி

    கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்குகிறது- ரங்கசாமி இன்று பட்ஜெட் தாக்கல்

    புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அதில் புதிய சலுகைகள், திட்டங்கள் வெளியிடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் என்.ஆர்.-காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

    முதல்-அமைச்சராக பதவி வகித்து வரும் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகளில் கடந்த சில நாட்களாக மும்முரமாக ஈடுபட்டு வந்தார்.

    இதற்காக அரசு சார்பில் ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு திட்ட வரையறை தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (வியாழக் கிழமை) காலை தொடங்குகிறது. புதிய அரசின் முதல் கூட்டம் இது என்பதால் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றுகிறார்.

    அதன்பின் காலை 11.30 மணியளவில் துணை சபாநாயகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது. அத்துடன் சபை நடவடிக்கைகள் முடிவடைகிறது.

    அதன்பின் மாலை 4.30 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடுகிறது. அப்போது 2021-22-ம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை நிதி துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்.

    ரூ.10 ஆயிரத்து 100 கோடியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தார். அதில் மத்திய அரசு ரூ.9 ஆயிரத்து 900 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. நீண்ட இழுபறிக்கு பின்னரே இந்த ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள், நலத்திட்டங்கள், சலுகைகள் உள்ளிட் அம்சங்கள் பற்றி தீவிரமாக ஆலோசித்து சேர்க்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் மேலும் பல முக்கிய திட்டங்கள் சேர்க்கப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

    புதிய அரசின் முதல் பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அம்சங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. குறிப்பாக தமிழகத்தைப்போல் புதுவையிலும் பெண்களுக்கு இலவச பஸ் வசதி, விவசாயிகள், சுய உதவி குழுவினருக்கு சலுகைகள் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக புதுவையில் தொழில்கள் நசிந்துள்ளன. எனவே அவற்றை சரிசெய்ய தொழிற்சாலைகளுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று வர்த்தகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    புதுவை பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவதை தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் காபினெட் அறையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய் ஜெ.சரவணன் குமார், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் அரசு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    சட்டசபை கூட்டத்தை யொட்டி பாதுகாப்பு ஏற் பாடுகள் தொடர்பாக சபாநாயகர் செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் போலீஸ் சூப்பிரண்டுகள் ரக்சனாசிங், முருகவேல், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். சட்டசபை அலுவல்கள் முடியும் வரை கூடுதல் பாதுகாப்பு போட முடிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே வாரிய தலைவர்கள் பதவியை பெறுவதில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையே கடும் போட்டி இருந்து வருகிறது. கூட்டணி கட்சியான அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் வாரியம் கேட்டு வலியுறுத்தி வருகின்றன. மொத்தத்தில் முக்கிய வாரியங்களை பெற்று விட வேண்டும் என்பதில் இந்த கட்சிகளிடையே போட்டாபோட்டி காணப்படுகிறது.

    சட்டசபை கூட்டத் தொடர் நிறைவு பெற்றதும் வாரிய தலைவர் பதவி நியமனம் தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி முடிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
    Next Story
    ×