என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தாய்-மகளை கட்டிப்போட்டு 35 பவுன் நகை, பணம் கொள்ளை: 2 வாலிபர்கள் கைது

    கோட்டக்குப்பத்தை சேர்ந்த அபினேஷ் (22) என்பவருடன் சேர்ந்து தாய், மகளை கட்டிப்போட்டு கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை நேருவில் நகர் சுவாமி விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் புஷ்பலதா (வயது 56). இவரது மகள் பிரேமா (வயது 32). இவர் மடுகரைபேட் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தாயும், மகளும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

    பிரேமாவுக்கு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் திருமணத்துக்காக 35 பவுன் நகைகளை வாங்கி வீட்டில் வைத்திருந்தனர்.

    நேற்று முன்தினம் இரவு இருவரும், திருமண வேலைகள் சம்பந்தமாக வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தனர். நள்ளிரவு வரை தாயும் மகளும் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் தூங்கச் சென்றனர். அப்போது வீட்டுக்கு புகுந்த மர்மநபர்கள் 2 பேர், தாய், மகளை மடக்கி கீழே தள்ளி வாயை பொத்தினர். அதில் ஒருவன் கத்தியை எடுத்து சத்தம்போட்டால் குத்திக்கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக தெரிகிறது.

    பின்னர் தாயையும், மகளையும் கட்டிப்போட்டுவிட்டு பீரோவில் வைத்திருந்த 35 பவுன் நகை, ரூ.18 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துவிட்டு சென்றனர்.

    இதற்கிடையே ஒரு வழியாக பிரேமா கட்டுக்களை அவிழ்த்தார். பின்னர் அவர், செல்போன் மூலம் தனது சித்தி மகன் குமரன் மற்றும் உறவினர்களுக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் வீட்டுக்கு வந்து 2 பேரையும் மீட்டனர்.

    இதுதொடர்பாக லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையின்போது அறை இருட்டாக இருந்ததால் கொள்ளையடிக்க வந்தவர்களின் முகம் தெரியவில்லை. ஆனால் அவர்களில் ஒருவன் தங்கள் வீட்டிற்கு அவ்வப்போது வந்து செல்லும் அதே பகுதியை சேர்ந்த அய்யனார் (22) என்பவரது பேச்சு போல் இருந்ததாக தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் அய்யனாரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், கோட்டக்குப்பத்தை சேர்ந்த அபினேஷ் (22) என்பவருடன் சேர்ந்து தாய், மகளை கட்டிப்போட்டு கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×