என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசு
    X
    பட்டாசு

    கொரோனா மற்றும் கடும் கட்டுப்பாடுகளால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி விற்பனை மந்தம்

    தீபாவளி மற்றும் வட மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் தசரா பண்டிகைக்கு 2 மாதங்களே இருப்பதால் வழக்கமாக வடமாநிலங்களில் ஆர்டர்கள் வரும்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

    இதனை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் நாட்டின் 80 சதவீத தேவையை நிறைவு செய்கிறது.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு உற்பத்தி, விற்பனை ஆகியவை பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது.

    பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

    தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். சுற்றுச்சூழலை மாசடைய செய்யும் முக்கிய வேதிப்பொருட்களை கலக்கக்கூடாது. பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டும் போன்ற உத்தரவுகளை பிறப்பித்தது.

    இதனால் 2019-ம் ஆண்டு பட்டாசு ஆலைகள் 100 சதவீதம் இயங்க முடியவில்லை. பலர் வேலை இழந்தனர்.

    பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. 3 மாதங்களுக்கும் மேலாக ஆலைகள் மூடப்பட்டன. இதனால் பட்டாசு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது.

    2020-ம் ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. இதனால் உற்பத்தி மற்றும் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போதும் எதிர்பார்த்த அளவுக்கு பட்டாசு விற்பனை நடைபெறவில்லை.

    இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் பட்டாசு ஆலைகள் மீண்டும் தங்களது உற்பத்தியை தீவிரப்படுத்தி உள்ளது.

    தீபாவளி மற்றும் வட மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் தசரா பண்டிகைக்கு 2 மாதங்களே இருப்பதால் வழக்கமாக வடமாநிலங்களில் ஆர்டர்கள் வரும்.

    ஆனால் இந்த ஆண்டு ஆர்டர்கள் குறைந்த அளவுதான் வருகிறது. இதனால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாடு முழுவதும் 3-வது அலை செப்டம்பர் மாதம் தொடங்கி அடுத்தடுத்த மாதங்களில் உச்சத்தை தொடும் என கருதப்படுகிறது.

    இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது. எனவே பட்டாசு வியாபாரிகள் ஆர்டர்களை கொடுக்க தயங்குவதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×