என் மலர்
செய்திகள்

ரேஷன் அரசியுடன் பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வேனையும், கைது செய்யப்பட்ட டிரைவரையும் படத்தில் காணலாம்.
பெங்களூருவுக்கு சரக்கு வேனில் கடத்திய 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் - டிரைவர் கைது
ராயக்கோட்டையில் இருந்து பெங்களூருவுக்கு சரக்கு வேனில் கடத்திய 2½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் சுற்றுவட்டார பகுதியில், ரேஷன் பொருட்களை வாங்கி கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி வருவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சக்கரை மற்றும் போலீசார் அனுசோனை பஸ் நிறுத்தம் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக கெலமங்கலம் நோக்கி சென்ற சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 2½ டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கே.செட்டிஅள்ளி பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது 27) என்பது தெரிய வந்தது.
மேலும் இவர் ராயக்கோட்டை, நெல்லூர் பகுதிகளில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து டிரைவர் அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் சரக்கு வேன் மற்றும் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் ரேஷன் அரிசியை கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவசாமி, தென்னரசு ஆகியோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இந்த ரேஷன் அரிசி கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






