என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    ஊத்தங்கரையில் ரூ.21 லட்சம்-18 பவுன் நகை கொள்ளை: தனிப்படை போலீசார் விசாரணை

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ரூ.21 லட்சம் பணம் மற்றும் 18 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜ் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). இவரது சொந்த ஊர் பாவக்கல் ஆகும். 

    இவர் பெங்களுருவில் கட்டிட ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவக்குமாரின் மாமனார் இறந்தார். அதற்காக சிவக்குமார் குடும்பத்துடன் கோவைக்கு சென்றார். இந்த சிவக்குமாரின் வீடு அருகில் வசந்தகுமார் (37) என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். அவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். 

    இந்த நிலையில் சிவக்குமார் மற்றும் வசந்தகுமார் ஆகியோரின் வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவுகள் திறந்த நிலையில் நேற்று இருந்தது.

    இதை சிவக்குமாரின் தம்பி செந்தில்குமார் பார்த்து ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். 

    அதில் சிவக்குமாரின் வீட்டில் ரூ.21  லட்சம் ரொக்கமும், 18  பவுன் தங்க நகைகளும், வசந்தகுமார் வீட்டில் ரூ.30 ஆயிரம் பணமும்,  இரண்டு ஜோடி வெள்ளி கொலுசுகள்  திருட்டு  திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது. 

    சிவக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாவக்கல் கிராமத்தில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை விற்று அதில் வந்த பணம் ரூ.21 லட்சத்தை வீட்டில் வைத்திருந்தார். அந்த பணமும், நகைகளும் திருட்டு போய் உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த திருட்டு குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதேபோல கைரேகை நிபுணர்களும் திருட்டு நடந்த வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. ஊத்தங்கரையில் ஒரே பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் ரூ.21 லட்சம் ரொக்கம், 18 பவுன் தங்க நகைகள் திருட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

    இதற்கிடையே இந்த துணிகர கொள்ளை குறித்து விசாரிக்க சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். 

    இதில் சிவகுமாரின் அக்காள் மகன், மற்றும் வீட்டு வேலைக்காரப் பெண் ஆகிய இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டை சுத்தம் செய்துள்ளனர். 

    எனவே கடைசியாக வீட்டுக்குள் இருந்த அவர்கள் இருவரிடமும் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் முடிவில் உண்மை தெரியவரும் என்று தனிப்படை போலீசார் தெரிவித்தனர். 
    Next Story
    ×