search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டுகள்- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து செம்பனார்கோவிலில் கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆட்டோவை கயிறு கட்டி சாலையில் இழுத்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பொறையாறு:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து செம்பனார்கோவிலில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே செல்லும் நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஏ.சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை தேர்தல் பணி குழு தலைவர் ஆக்கூர் செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஆர்ப்பாட்டத்தில், தினமும் உயரும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைத்திட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமான வரம்புக்குள் வராத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 வழங்கிட வேண்டும்.

    நபர் ஒன்றுக்கு 10 கிலோ உணவு தானியங்களை மத்திய தொகுப்பில் இருந்து இலவசமாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோவிற்கு மாலை அணிவித்து கயிறு கட்டி செம்பனார்கோவில் கடை வீதி வழியாக சாலையில் இழுத்து சென்று தபால் நிலையதை அடைந்தனர். அங்கு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.
    Next Story
    ×