search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான 2 டிரைவர்கள்
    X
    கைதான 2 டிரைவர்கள்

    வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- 2 டிரைவர்கள் கைது

    வேலூர் தொரப்பாடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ரேஷன் அரிசி மூட்டைகள் ஒப்படைக்கப்பட்டன.
    வேலூர்:

    வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் மோட்டூர் பகுதியில் வீடுகளில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடத்தி செல்லப்படுவதாக மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அவர் உத்தரவின்பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ், பறக்கும்படை தாசில்தார் கோட்டீஸ்வரன், உணவுப்பொருள் பாதுகாப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மோட்டூர் பகுதியில் உள்ள வீடுகளில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டூர் பிரசாத்நகர் 3-வது தெருவில் ஒரு வீட்டின் முன்பு ஆட்டோ, மினிலாரி நின்று கொண்டிருந்தது. 2 பேர் அவற்றில் இருந்து மூட்டைகளை இறக்கி அந்த வீட்டுக்குள் கொண்டு சென்றனர்.

    அதைக்கண்டு சந்தேகம் அடைந்த குழுவினர் உடனடியாக ஆட்டோ, மினிலாரியில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில், ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. அதிகாரிகளை கண்டதும் 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். குழுவினர் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அதைத்தொடர்ந்து அந்த வீட்டிற்குள் சோதனை செய்தனர். அங்கு மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஆட்டோ, மினிலாரி மற்றும் வீட்டில் என்று மொத்தம் 60 மூட்டைகளில் 3 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

    அதையடுத்து 2 பேரிடமும் உணவுப்பொருள் பாதுகாப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர். அதில், அவர்கள் வேலூர் கஸ்பா வசந்தபுரத்தை சேர்ந்த மினிலாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் ராமச்சந்திரன் (வயது 38), சைதாப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் மற்றும் டிரைவர் இம்ரான் (26) என்பதும், வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை பெற்று வீட்டில் பதுக்கி வைத்து ஆந்திராவுக்கு கடத்தி செல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து ஆட்டோ, மினிலாரி பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் தொரப்பாடியில் உள்ள நுகர்பொருள் வாணிபகிடங்கில் ரேஷன் அரிசி மூட்டைகள் ஒப்படைக்கப்பட்டன.

    இதுகுறித்து வேலூர் உணவுப்பொருள் பாதுகாப்புபிரிவு போலீசார் வழக்குப்பதிந்து ராமச்சந்திரன், இம்ரான் ஆகியோரை கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    கைதான ராமச்சந்திரன் மீது ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×