search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    ஓசூரில் ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.25 லட்சம் நகை, பணம் கொள்ளை

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சித்தனப்பள்ளி சக்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன் (வயது 34) இவர், பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

    தற்போது, கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்து பணி செய்யுமாறு சீனிவாசனை அவர் பணிபுரிந்து வரும் நிறுவனத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    இதனால் சொந்த ஊரான ஆந்திர மாநிலத்திற்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.

    இந்த நிலையில் அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர். சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, அவர் நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தார்.

    அப்போது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு தங்க, வெள்ளி நகைகள், ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    சீனிவாசன் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல், நேற்று முன்தினம் நள்ளிரவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் வைத்திருந்த 63 பவுன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. திருட்டு போன பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் இருக்கும்.

    இது குறித்து சீனிவாசன் ஓசூர் ஹட்கோ போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மாவட்ட சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வியும் நேரடி விசாரணை நடத்தினார்.

    மேலும் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். மோப்ப நாய் கொண்டும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    Next Story
    ×