search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவசங்கர் பாபா
    X
    சிவசங்கர் பாபா

    சிவசங்கர் பாபாவிடம் போலீசார் அதிரடி விசாரணை

    பாதிக்கப்பட்ட 3 முன்னாள் மாணவிகள் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து சிவசங்கர் பாபாவிடம் நூற்றுக்கணக்கான கேள்விகள் சரமாரியாக எழுப்பப்பட்டன.
    சென்னை:

    சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுசில் அரி இன்டர்நே‌ஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி உண்டு, உறைவிட பள்ளி ஆகும். ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் அங்கு படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியை சாமியார் சிவசங்கர் பாபா நடத்தி வந்தார். தொழில் அதிபராக இருந்து ஆன்மீகவாதியாக மாறி அதன் பிறகு தன்னையே கடவுளாக கூறிக்கொண்ட சிவசங்கர் பாபா, ஆன்மீக நிகழ்ச்சிகளையும் அதிகம் நடத்தி உள்ளார்.

    அப்போது நடனமாடியபடி பக்தர்களுக்கு அவர் ஆசி வழங்குவதை வழக்கமாக வைத்து இருந்தார்.

    அவரது ஆன்மீக நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்களும் இணையதளங்களில் பரவி உள்ளது. அதில் பெண்களும் நடனமாடி வருகிறார்கள். தனது பள்ளிக்கூடத்திலும் ஆன்மீக நிகழ்ச்சிகளை மாணவ-மாணவிகளை வைத்து சிவசங்கர் பாபா நடத்தி உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவசங்கர் பாபா மீது 3 முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினர்.

    இதுதொடர்பாக மாமல்லபுரம் அனைத்து மகளிர் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்தனர்.

    போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


    சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. குணவர்மன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். இதற்கிடையே சிவசங்கர் பாபா உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூனில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அங்கு தனிப்படை போலீசார் விமானத்தில் விரைந்து சென்றனர்.

    போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது சிவசங்கர் பாபா ஆஸ்பத்திரியில் இல்லை. அவர் அங்கு இருந்து தப்பியது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவான அவரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் சிவசங்கர் பாபா டெல்லியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிவசங்கர் பாபாவை நேற்று மாலை கைது செய்தனர்.

    பின்னர் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபாவை இரவோடு இரவாக சென்னைக்கு அழைத்து வந்தனர். நேற்று இரவு 12 மணியளவில் சிவசங்கர் பாபாவுடன் போலீசார் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

    போலீசார் விசாரணை

    விமான நிலையத்தில் இருந்து சக்கர நாற்காலியில் சிவசங்கர் பாபா போலீஸ் வாகனத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    பின்னர் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு நள்ளிரவு 1 மணியளவில் சிவசங்கர் பாபாவை போலீசார் அழைத்து வந்தனர். அங்கு சிறிது நேரம் அவரை ஓய்வு எடுக்க சொன்னார்கள். பின்னர் சிவசங்கர் பாபாவிடம் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

    பாதிக்கப்பட்ட 3 முன்னாள் மாணவிகள் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து சிவசங்கர் பாபாவிடம் நூற்றுக்கணக்கான கேள்விகள் சரமாரியாக எழுப்பப்பட்டன.

    இதில் பல கேள்விகளுக்கு பதில் அளித்த சிவசங்கர் பாபா, சில கேள்விகளுக்கு மவுனம் காத்துள்ளார்.

    சிவசங்கர் பாபாவிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை வழக்கின் முக்கிய ஆதாரங்களாக சேர்த்துள்ள போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

    இன்று காலை எழும்பூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இருந்து சிவசங்கர் பாபா செங்கல்பட்டு கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    சிவசங்கர் பாபாவிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் அவரை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோர்ட்டில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது. அதன் பிறகு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

    Next Story
    ×