search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய லாரியை கடத்திய 3 பேர் கைது

    கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய லாரியை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையத்தை சேர்ந்த மகேசுவரன் என்பவர் மதுரை சாலையில் லாரி போக்குவரத்து அலுவலகம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான லாரியை இவரது அலுவலகம் எதிரே சாலையில் நிறுத்தி வைத்திருந்தார். கடந்த 6-ந் தேதி இந்த லாரியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

    இது குறித்து மகேசுவரன் அளித்த புகாரின் பேரில், வடக்கு போலீசாரிடம் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் உத்தரவின் பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு நாகசங்கர் தலைமையில் திருடு போன லாரியை கண்டுபிடிக்க 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் அமைக்கப் பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் மூலம் தனிப்படையினர் லாரியை தேடி வந்தனர்.

    திருடப்பட்ட லாரி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை சேர்ந்த சங்கர் என்பவரின் பணிமனையில் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த சேக் செய்யது அலி, புளியரையை சேர்ந்த அப்துல்காசிம் மற்றும் முகமது நசீம் ஆகியோர் லாரியை திருடியது தெரிய வந்தது. திருடர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லாரியை திருடி, அதன் பதிவு எண்ணை மாற்றி தொடர்ச்சியாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும் திருடப்பட்ட லாரி மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி என 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் அவற்றையும் நீதி மன்றத்தில் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×