search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யுவராஜ் - அன்பழகன் - இளையராஜா
    X
    யுவராஜ் - அன்பழகன் - இளையராஜா

    சாராய வேட்டைக்கு சென்ற இடத்தில் வீடு புகுந்து திருடிய போலீசார்- கைது செய்து விசாரணை

    சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், போலீசார் இளையராஜா, யுவராஜ் ஆகிய 3 பேரையும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் நச்சுமேடு மலைப்பகுதியில் அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் யுவராஜ், இளையராஜா மற்றும் ஊர்க்காவல்படை வீரர் ஒருவர் நேற்று முன்தினம் சாராய வேட்டைக்கு சென்றனர். போலீசாரை கண்டதும் சாராய வியாபாரிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அங்கிருந்த சாராய அடுப்பு, சாராய ஊறல்களை அழித்த போலீசார் பின்னர் நச்சுமேடு மலைக்கிராமத்தில் உள்ள சாராய வியாபாரிகள் வீடுகளில் சாராய பாக்கெட்டுகள் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனையிட்டனர்.

    பூட்டியிருந்த சில வீடுகளின் பூட்டு மற்றும் பீரோக்களை உடைத்து பார்த்தனர். அப்போது 2 வீடுகளில் இருந்து ரூ.8½ லட்சம் பணம் மற்றும் 15 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு போலீசார் அங்கிருந்து புறப்பட்டனர்.

    இதனை அறிந்த மலைக்கிராம மக்கள் போலீசாரை முற்றுகையிட்டு, ஆள் இல்லாத வீடுகளின் பூட்டை உடைப்பது தவறு, அத்துடன் பீரோக்களை உடைத்து எடுக்கப்பட்ட பணம், நகையை ஒப்படைக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அந்த வீடுகளில் இருந்து எடுக்கப்பட்ட பணம், நகை திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நச்சுமேடு மலைக்கிராம மக்கள் அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், சாராய வேட்டைக்காக மலைப்பகுதிக்கு வந்து வீடுகளின் பூட்டு, பீரோக்களை உடைத்து நகை, பணத்தை எடுத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

    இதுதொடர்பாக வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், போலீசார் யுவராஜ், இளையராஜா மற்றும் ஊர்க்காவல் படை வீரரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

    அதன் அடிப்படையில் சாராய வேட்டைக்கு சென்ற இடத்தில் பூட்டிய வீடுகளுக்குள் புகுந்து நகை, பணத்தை திருடி வந்ததாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் மீது அரியூர் போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், போலீசார் இளையராஜா, யுவராஜ் ஆகிய 3 பேரையும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்கள்.
    Next Story
    ×