search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகைகள்
    X
    நகைகள்

    பெண்ணிடம் 50 பவுன் நகை, ரூ.8 லட்சம் மோசடி- தலைமறைவான தம்பதிக்கு வலைவீச்சு

    பெண்ணிடம் 50 பவுன் நகைகள், ரூ.8 லட்சம் மோசடி செய்து தலைமறைவான தம்பதியை போலீசார் தேடி வருகிறார்கள்.
    காரைக்குடி:

    காரைக்குடி பர்மா காலனியை சேர்ந்தவர் சுந்தரி (வயது 47). இவரது கணவர் மாதவன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். காரைக்குடி கற்பக விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி காமாட்சி. சுந்தரியும் காமாட்சியும் நெருங்கிய தோழிகள். இருவரது குடும்பத்துக்கும் நெருங்கிய பழக்கம் உண்டு.

    இந்த நிலையில் காமாட்சியும் அவரது கணவர் சீனிவாசனும் சுந்தரியிடம் ஷேர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் வர்த்தகம் ஆகியவற்றில் முதலீடு செய்தால் நன்கு சம்பாதிக்கலாம். அதன்மூலம் நிறைய வருமானம் வருகிறது. நீங்களும் முதலீடு செய்தால் உங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும். இருந்த இடத்திலிருந்து பல லட்ச ரூபாய் சம்பாதிக்க இதுவே சிறந்த வழி என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.

    மேலும் நாம் இருவரும் சேர்ந்து செய்யும் முதலீட்டில் கிடைக்கும் லாபத்தில் உங்களுக்கும் உரிய பங்கு தருகிறோம் என கூறியுள்ளனர். இதை நம்பிய சுந்தரி தன்னிடமிருந்த ரூ.8 லட்சத்தை பங்கு முதலீடு மற்றும் ஆன்லைன் வர்த்தகத்திற்காக காமாட்சி, சீனிவாசன் தம்பதியிடம் கொடுத்துள்ளார். மேலும் தனது சகோதரி, தாயார் ஆகியோரிடம் இருந்து 11 பவுன் நகைகளையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

    சில நாட்களில் காமாட்சி, சீனிவாசன் தம்பதியினர் சுந்தரியிடம் ரூ.3 லட்சத்தை பங்கு முதலீட்டில் வந்த லாபத்தில் உங்கள் பங்கு என்று கூறி கொடுத்துள்ளனர். இதனால் உற்சாகமடைந்த சுந்தரி மேலும் தன்னிடம் இருந்த 39 பவுன் நகைகளை அவர்களிடம் கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர்கள் சுந்தரியை பார்க்கவே இல்லை. பேசுவதையும் நிறுத்திக் கொண்டனர்.

    இதுகுறித்து சுந்தரி கேட்டபோது ஏதேதோ காரணங்களை கூறி வந்துள்ளனர். அப்போது சுந்தரி நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்தால் போதும் எனக்கு வேறு ஏதும் தேவையில்லை என்று கூறி ரூ.8 லட்சம் பணத்தையும் 50 பவுன் நகைகளையும் திருப்பி கேட்டுள்ளார். அதற்கு இதோ தருகிறேன் என்று அவர்கள் தொடர்ந்து ஏமாற்றி வந்தனர். சம்பவத்தன்று சுந்தரி நகைகளையும் பணத்தையும் கேட்டு காமாட்சி வீட்டுக்கு வந்த போது காமாட்சியும், சீனிவாசனும் சுந்தரியை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து சுந்தரி சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனிடம் புகார் செய்தார்.அவரது உத்தரவின் பேரில் காரைக்குடி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி சுந்தரியிடம் 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.8 லட்சத்தை மோசடி செய்ததாக காமாட்சி, சீனிவாசன் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள அவர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×