search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வேறு பள்ளியில் சேர்க்க பெற்றோர் முடிவு செய்ததால் மாணவி தூக்குபோட்டு தற்கொலை

    மூலக்குளம் அருகே வேறு பள்ளியில் சேர்க்க பெற்றோர் முடிவு செய்ததால் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை மூலக்குளம் சாலை தெருவை சேர்ந்தவர் ஜான்பிராஸ்வா. இவரது மனைவி ஜெனிதாமேரி. இருவரும் ஒரே நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்களது மகள் இசபெல்ஜீஸ்தின் (வயது16). இவர் லாஸ்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளி யில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தார்.

    இதற்கிடையே குடும்ப சூழ்நிலை காரணமாக இசபெல்ஜீஸ்தினை அரசு பள்ளியில் சேர்க்க அவரது பெற்றோர் முடிவு செய்து இருந்தனர்.

    இந்தநிலையில் இசபெல்ஜீஸ்தினின் பள்ளி தோழிகள் தாங்கள் அதே பள்ளியில் மேற்படிப்பிற்காக ஆன்லைன் வகுப்பில் படித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

    இதனால் இசபெல்ஜீஸ் தின் மன வருத்தத்தில் இருந்து வந்தார். தோழிகள் ஒரே பள்ளியில் படிக்கும் போது தன்னை பெற்றோர் அரசு பள்ளியில் சேர்க்க முடிவு செய்துள்ளார்களே என சோகத்தில் இருந்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று காலை ஜான்பிராஸ்வாவும் அவரது மனைவி ஜெனிதா மேரியும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர்.

    வீட்டில் இசபெல் ஜீஸ்தின் தனியாக இருந்தார். மாலையில் வேலை முடிந்து கணவன்-மனைவி வீட்டுக்கு வந்த போது கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது இசபெல் ஜீஸ்தின் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மகளை தூக்கில் இருந்து மீட்டு ஒரு ஆட்டோவில் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இசபெல்ஜீஸ்தின் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஜான் பிராஸ்வா ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    Next Story
    ×