search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றபோது எடுத்தபடம்.
    X
    சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றபோது எடுத்தபடம்.

    ராமநாதபுரத்தில் 4 சட்டமன்ற தொகுதி வாக்குகள்: 14 மேஜைகளில் எண்ணப்பட்டு சுற்றுவாரியாக முடிவு அறிவிப்பு

    ராமநாதபுரத்தில் 4 சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக் கையின்போது மின்னணு வாக்குகள் 14 மேஜைகளிலும், தபால் வாக்குகள் 8 மேஜைகளிலும் எண்ணப்பட்டு சுற்று வாரியாக முடிவு அறிவிக்கப்படும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சின் போது மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற மே 2-ந்தேதி காலை 8 மணிக்கு ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற உள்ளது.

    தேர்தல் ஆணைய உத்தரவின்படி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு தலா 14 மேஜைகளும், தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தலா 8 மேஜைகளும் நிர்ணயிக்கப்பட்ட அறைகளில் தனித்தனியாக அமைக்கப் படும். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு நுண்பார்வையாளர், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், வாக்கு எண்ணிக்கை உதவியாளர் பணியில் ஈடுபடுவார்கள்.

    வாக்கு எண்ணிக்கை தொடங்குவது முதல் இறுதி வரை நுண்பார்வையாளர்களின் பணி மிகவும் முக்கியமானதாகும். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான சட்டமன்ற தொகுதி மற்றும் எந்த மேஜையில் பணியாற்ற வேண்டும் என்பது குறித்து கணினி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்படும். முதலில் தபால் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கப்படும்.

    தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஒரு சுற்று எண்ணிக்கைக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து எடுக்கப்பட்டு சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, அடுத்த சுற்றுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுக்கப்படும்.

    நுண்பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கையின் போது தங்களுக்கு வழங்கப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களின் வரிசை எண்ணை 17சி படிவத்துடன் ஒப்பிட்டு சரிபார்த்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்டது தானா என்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடிவுக்கான பொத்தானை அழுத்தியவுடன் கட்டுப்பாட்டு கருவி முகவர்கள் பார்வைக்கு தெளிவாக தெரியும் வகையில் வைக்க வேண்டும். கட்டுப்பாட்டு கருவியில் வரும் முடிவுகளை இரு பிரதிகள் தயாரித்து வேட்பாளர்களின் முகவர்களிடம் கையொப்பம் பெற்ற பின்பு சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    தேர்தல் நடத்தும் அலுவலர் ஒவ்வொரு சுற்று வாரியாக மொத்த வாக்கு எண்ணிக்கை விவரங்களை அறிவிப்பார் என கலெக்டர் தெரிவித்தார்.இந்த பயிற்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் நஜிமுன்னிசா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திக், தேர்தல் பயிற்சி பொறுப்பு அலுவலர் உதவி மகளிர் திட்ட அலுவலர் கிருஷ்ணகுமார், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் நுண்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×