search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்திரகுமாரி - தனசேகர்.
    X
    சந்திரகுமாரி - தனசேகர்.

    புதுவையில் மனைவியை கொன்று டிரைவர் தற்கொலை

    புதுச்சேரியில் குடும்ப தகராறில் மனைவியை கொன்று கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை ஆனந்தா நகரை சேர்ந்தவர் தனசேகர் (வயது43). கார் டிரைவர். இவரது மனைவி சந்திரகுமாரி (35). இவர்களுக்கு பவானி (15) என்ற மகளும், தார்கே‌‌ஷ் (13) என்ற மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

    இந்தநிலையில் சந்திரகுமாரியின் அண்ணன் சந்திரசேகரின் குழந்தைக்கு மயிலத்தில் காதணிவிழா நடந்தது. இதற்காக தனசேகர், சந்திரகுமாரி மற்றும் குழந்தைகளை அழைத்து செல்ல சந்திரசேகர் நேற்று மாலை 3 மணி அளவில் லாஸ்பேட்டைக்கு வந்தார்.

    அப்போது சந்திரசேகரிடம், தனசேகர், சந்திரகுமாரி ஆகியார் குழந்தைகளை அழைத்து செல்லும்படியும், தாங்கள் பின்னால் வருவதாகவும் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு சந்திரசேகர் மயிலத்துக்கு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் தனசேகரும், சந்திரகுமாரியும் வரவில்லை.

    இதற்கிடையே விழா முடிந்தவுடன் சந்திரசேகர் மீண்டும் குழந்தைகளை தனசேகர் வீட்டில் விடுவதற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக மூடப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த சந்திரசேகர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தார். அப்போது தனசேகர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவரின் காலுக்கு அடியில் சந்திரகுமாரி பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சந்திரசேகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிரிழந்த சந்திரகுமாரியின் கழுத்தில் சில காயங்கள் காணப்பட்டன. எனவே கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தனசேகர், சந்திரகுமாரியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×