search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    வில்லியனூர் அருகே கல்லூரி மாணவி அடித்துக் கொலை

    வில்லியனூர் அருகே கல்லூரி மாணவியை அடித்து கொன்று பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாட்டில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை திருக்கனூரை அடுத்துள்ள சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ராஜஸ்ரீ (17). இவர் சேதராபட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி விட்டு வீட்டில் இருந்து கிளம்பி சென்றார்.

    கல்லூரி முடிந்து மதியம் 3 மணியளவில் போன் மூலம் வீட்டில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.

    ஆனால், அவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜஸ்ரீயை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வில்லியனூர் அடுத்துள்ள பொறையூர் பேட் பகுதியில் உள்ள சுடுகாட்டில் மர்மமான முறையில் சாக்கு மூட்டை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் ராஜஸ்ரீ பிணம் இருந்தது. உடலை போலீசார் கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பொறையூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ராஜஸ்ரீயை சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து வந்தது தெரிய வந்தது.

    அவருடன் மேலும் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ஏற்பட்ட தகராறில் மாணவி ராஜஸ்ரீயை அடித்து கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாட்டில் வீசி சென்றது தெரிய வந்தது.

    மாணவியை கொன்றவர்கள் யார்? எதற்காக கொன்றார்கள்? காதல் பிரச்சனையா? அல்லது வேறு ஏதும் காரணமாக என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×