என் மலர்
செய்திகள்

விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது எடுத்த படம்
விருத்தாசலத்தில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கழிவுநீர் கலந்த குடிநீரை எடுத்து வந்து விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்:
விருத்தாசலம் நகராட்சி 6-வது வார்டு துர்க்கை அம்மன்நகரில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பழமலை நாதர் நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் வினி யோகம் செய்யப்படுகிறது.
ஆனால் குடிநீர் குழாய், ஆங்காங்கே சேதமடைந்துள்ளதால், அதில் கழிவுநீர் கலந்து வருகிறது. இந்த நீரை தான் தினந்தோறும் பொது மக்க ளுக்கு அதிகாரிகள் வினியோகம் செய்கிறார்கள். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் அசோகன் தலைமையில் சாக்கடை கலந்த குடிநீரை பாட்டிலில் எடுத்து வந்து, விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் வந்து, போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்ததால், அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






