search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சென்னிமலையில் மொபட் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உடல் நசுங்கி பலி

    சென்னிமலையில் மொபட் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உடல் நசுங்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா பாப்பினி பச்சபா பாளையம் வாழைதோட்டம் என்ற பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகள் மஞ்சு (17).

    இவர் இன்று காலை ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள அம்மாபாளையம் என்ற பகுதியில் நடக்கும் உறவினர் வீட்டு விசே‌ஷத்துக்காக தனது தாத்தா பொன்னுசாமி (60) என்பவருடன் மொபட்டில் சென்றார்.

    இவர்கள் 2 பேரும் இன்று காலை சுமார் 8 மணியளவில் சென்னிமலை தெற்கு ராஜவீதியில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி திடீரென இவர்கள் மீது மோதி விபத்தானது.

    இதில் இளம்பெண் மஞ்சு மீது டிப்பர் லாரி ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியானார். அவரது தாத்தா பொன்னுசாமியின் 2 கால்களும் துண்டாகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்.

    இதுப்பற்றி தெரிய வந்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த பொன்னுசாமியை மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் விபத்தில் பலியான இளம்பெண் மஞ்சுவின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் டிப்பர் லாரியை ஓட்டி வந்த பவானி ஜம்பை வைரமங்கலம் பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் குமார் (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    Next Story
    ×