என் மலர்
செய்திகள்

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
24-ந்தேதி கொரோனா தடுப்பூசி முகாம்- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்
புதுச்சேரியில் நோய் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக 24-ந்தேதி (புதன்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி:
கொரோனாவை தற்போது தடுத்து நிறுத்தாவிட்டால் நாடு முழுவதும் 2-வது அலை உருவாகி விடும், எனவே மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதையடுத்து புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முன்னெச்சரிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மட்டும் 61 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வாகனம் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இதன் தொடக்க விழா நேற்று காலை முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே நடந்தது. நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அங்கு இருந்த பொதுமக்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். சிலருக்கு அவரே முகக்கவசம் அணிவித்து கிருமிநாசினியை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்று விளக்கி கூறினார்.
இந்த வாகனத்தில் கொரோனா பரவும் விதம், அதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், நோய் அறிகுறிகள், யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா பரவாமல் தடுக்க அனைவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். இதற்காக தான் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. பக்கத்து மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால் தற்போது கொரோனா பரிசோதனையை அதிகரித்துள்ளோம்.
கிருமாம்பாக்கம் மகாத்மாகாந்தி மருத்துவக்கல்லூரியில் நாளை மறுநாள் (புதன் கிழமை) பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. அன்று காலை 10 மணியில் இருந்து இரவு 8 மணி வரை இந்த முகாம் நடைபெறும். முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட தொடர் நோய் உள்ளவர்கள் ஆதார் அட்டை கொண்டுவந்தால் போதும் அங்கேயே பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இந்த முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. இது குறித்து புதுவை மக்கள் அச்சப்படத் தேவையில்லை. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா வராமல் தடுக்கும். ஒருவேளை தொற்று வந்தால் கூட வீரியமாக இருக்காது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி மற்றும் வெண்டிலேட்டர் வசதியுடன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
புதுவையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை. எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். அரசியல் கட்சி கூட்டங்களில் பங்கேற்போர் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஆனந்த பிரகாஷ் மகேஸ்வரி, கவர்னரின் சிறப்பு செயலாளர் சுந்தரேசன், சுகாதாரத்துறை செயலாளர் அருண் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story






