search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    வீட்டை விட்டு ஓடியதால் ஆத்திரம்- கள்ளக்காதல் ஜோடி கொடூரக்கொலை

    வீட்டை விட்டு ஓடியதால் கள்ளக்காதல் ஜோடி அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மானாமதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே உள்ள மனச்சனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியேந்திரன் (வயது 30). இவருக்கும், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிளாங்காட்டூரைச் சேர்ந்த வளர்மதி (24) என்பவருக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நிவேதா (6) என்ற மகளும், ஆகாஷ் (3) என்ற மகனும் உள்ளனர்.

    சத்தியேந்திரன் திருச்சி சின்னக்கடை வீதியில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது ஊருக்கு வந்து மனைவியையும், குழந்தைகளையும் பார்த்து விட்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி வளர்மதி திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    விசாரணையில் வளர்மதிக்கும், மனச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்த வேல்ராஜ் (20) என்ற வாலிபருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு 2 பேரும் ஊரை விட்டு ஓடியது தெரியவந்தது. அவர்கள் திருச்சி தாராநல்லூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்தனர்.

    கள்ளக்காதல் ஜோடியை சத்தியேந்திரன் மற்றும் வளர்மதியின் சகோதரர் ராமையா என்ற மணிகண்டன் ஆகியோர் தேடி வந்தனர்.

    அவர்கள் திருச்சியில் இருப்பதை அறிந்து சத்தியேந்திரன், அவரது தம்பி பிரபு, ராசையா மற்றும் உறவினர் காட்டுராஜா, தனசேகர் ஆகியோர் திருச்சி சென்றனர்.

    அங்கு வேல்ராஜை சரமாரியாக தாக்கி விட்டு வளர்மதியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.

    இதில் படுகாயம் அடைந்த வேல்ராஜை போலீசார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் சத்தியேந்திரன், பிரபு உள்பட 6 பேரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் காட்டுராஜா மற்றும் தனசேகருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வளர்மதியை சந்தித்து உன்னால்தான் நாங்கள் கொலை வழக்கில் சிக்கி விட்டோம் என கூறி தகராறில் ஈடுபட்டனர்.

    தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த அவர்கள் அரிவாளால் வளர்மதியை சரமாரியாக வெட்டினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வளர்மதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்த மானாமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று வளர்மதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக காட்டுராஜா, தனசேகர் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×