search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    வலையில் சிக்கிய பாட்டிலில் இருந்த திரவத்தை குடித்த 3 மீனவர்கள் உயிரிழப்பு

    நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது வலையில் சிக்கிய பாட்டிலில் இருந்த திரவத்தை குடித்த 3 மீனவர்கள் உயிரிழந்தனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்கு மீன்பிடி தொழில் செய்ய ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்த ஜான் (வயது 48) என்பவருக்கு சொந்தமான படகில் அவரும், பாம்பனை சேர்ந்த செல்வேந்திரன் (48), தோமஸ் (58), அந்தோணி (42), வினோத் (38), போஸ் (40) ஆகிய 6 மீனவர்கள் வந்தனர்.

    கடந்த 1-ந்தேதி மதியம் இவர்கள் கோடியக்கரையில் இருந்து பெரிய படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    நேற்று முன்தினம் இரவு இவர்கள் கடலில் தங்கி மீன்பிடித்தபோது இவர்கள் வலையில் ஒரு பாட்டில் சிக்கியது. 3 லிட்டர் கொள்ளளவு கொண்ட அந்த பாட்டிலில் ஒரு வகையான திரவம் இருந்தது. இந்த பாட்டிலை வலையில் இருந்து எடுத்து மீனவர்கள் படகில் வைத்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து அந்தோணி, வினோத், போஸ் ஆகிய 3 பேரும் மற்றவர்களுக்கு தெரியாமல் படகில் இருந்த அந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த திரவத்தை மது என நினைத்து குடித்தனர். பின்னர் அவர்கள் தூங்க சென்று விட்டனர்.

    நேற்று காலை கரை திரும்பியபோது படகில் தூங்கிய அந்தோணி, வினோத், போஸ் ஆகிய 3 பேரையும் மற்ற மீனவர்கள் எழுப்பி உள்ளனர். ஆனால் அவர்கள் எழுந்திருக்காமல் மயங்கி கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற மீனவர்கள் படகை வேகமாக ஓட்டி கோடியக்கரைக்கு வந்தனர்.

    பின்னர் கரைக்கு வந்து பார்த்த போது அந்தோணி இறந்தது தெரிய வந்தது. மயங்கி கிடந்த வினோத், போஸ் ஆகிய 2 பேரையும் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவர்களை நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி போஸ், வினோத் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுகுறித்த தகவல் அறிந்த கடலோர காவல் குழுமம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    உயிரிழந்த மீனவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு தான் அந்த பாட்டிலில் இருந்தது சாராயமா? அல்லது எந்த வகை திரவம் என தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×