search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஓட்டப்பிடாரம் அருகே பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை

    ஓட்டப்பிடாரம் அருகே செல்போனில் கேம் விளையாடியதை தாயார் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கடற்கரையாண்டி. இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு மதுமிதா (வயது 16) என்ற மகளும், ஒரு மகனும் உண்டு. மதுமிதா அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இவர் அடிக்கடி வீட்டில் உள்ள செல்போனை எடுத்து கேம் விளையாடியதாகவும், இதனை அவரது தாயார் மாலதி பலமுறை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் இருந்த செல்போனை எடுத்து மதுமிதா கேம் விளையாடிக் கொண்டு இருந்தார். இதை அவரது தாயார் கண்டித்தார். இதனால் விரக்தி அடைந்த மதுமிதா வீட்டில் உள்ளே சென்று அங்குள்ள அறையை பூட்டிக் கொண்டார். பின்னர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரது சத்தம் கேட்டு பெற்றோர், உறவினர்கள் கதவை உடைத்துச் உள்ளே சென்றனர். அப்போது, அங்கு மதுமிதா உடல் கருகிய நிலையில் பரிதாபமாக இறந்து கிடந்தார். இதை பார்த்து அங்கு இருந்தவர்கள் கதறி அழுதனர்.

    இதுகுறித்து உடனடியாக புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மதுமிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓட்டப்பிடாரம் அருகே பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×