search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    வந்தவாசி அருகே நீச்சல் பழக சென்ற மாணவி கிணற்றில் மூழ்கி பலி

    வந்தவாசி அருகே நீச்சல் பழக சென்ற பள்ளி மாணவி கிணற்றில் மூழ்கி பலியானாள்.
    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் தமிழேந்தி (வயது 10), மகன் கவிமணி..

    இதில் தமிழேந்தி வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். அவள், நீச்சல் பழக தனது தோழிகளுடன் அருகில் உள்ள கிணற்றுக்குச் சென்றாள். அங்கு அவள், தனது உடலில் சேலையைக் கட்டிக்கொண்டு கிணற்றில் இறங்கி நீச்சல் பழகினாள்.

    அப்போது சேலை உடலில் சுற்றிக்கொண்டதால் ஈரத்தில் உடலோடு ஒட்டிக்கொண்டது. இதனால் அவளால் கை, கால்களை அசைக்க முடியவில்லை, எனக் கூறப்படுகிறது. இதனால் அவள் நீரில் மூழ்கினாள். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சகதோழிகள் கூச்சலிட்டனர்.

    அக்கம் பக்கத்தில் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் ஓடி வந்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடடனடியாக கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு வந்து, கிணற்றில் இறங்கி சிறுமி தமிழேந்தியை மீட்க முயன்று தண்ணீருக்குள் மூழ்கி தேடினர். ஆனால் தமிழேந்தியை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் அங்கு வந்த பெரணமல்லூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரில் மூழ்கி தேடினர். தமிழேந்தியை அவர்களால் பிணமாகத்தான் மீட்க முடிந்தது. இது குறித்து வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×