search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வேன்-மோட்டார்சைக்கிள் மோதல்: கல்லூரி விரிவுரையாளர் பலி

    திங்களூர் அருகே வேனும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி விரிவுரையாளர் பரிதாபமாக இறந்தார்.
    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த திங்களூர் அருகே உள்ள சம்பளக்காட்டுப்புதூரை சேர்ந்தவர் தென்னரசு (வயது33). இவர் சீனாபுரம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். மேலும் விவசாயமும் செய்து வந்தார். இந்த நிலையில் தென்னரசு தான் வளர்க்கும் கால்நடைகளுக்கு திங்களூரில் தீவனம் வாங்கினார். மோட்டார்சைக்கிளின் பின்புறம் அதை வைத்துக்கொண்டு நேற்று முன்தினம் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

    இரவு 8 மணி அளவில் போலநாயக்கன்பாளையம் பிரிவு அருகே சென்றபோது மோட்டார்சைக்கிளும், எதிரே வந்த ஆம்னி வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து தென்னரசு தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தென்னரசு நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். மேலும் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி அதை ஓட்டி வந்த திங்களூரை சேர்ந்த பழ வியாபாரியான ஜெயபிரகாஷ் (34) என்பவரும் படுகாயம் அடைந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திங்களூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தென்னரசு உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஜெயப்பிரகாஷ் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த தென்னரசுக்கு சுதா (32) என்ற மனைவி உள்ளார். பட்டதாரியான இவர், சீனாபுரத்தில் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு சச்சின் (8) என்கிற ஒரு மகன் உள்ளான். தென்னரசுவின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

    Next Story
    ×