என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
நீலகிரியில் கடந்த ஆண்டு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் ரூ.3½ கோடி அபராதம் வசூல்
நீலகிரியில் கடந்த ஆண்டு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் ரூ.3 கோடியே 57 லட்சம் அபராதமான வசூலிக்கப்பட்டது என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் 2019-ம் ஆண்டை விட 2020-ம் ஆண்டில் குற்ற வழக்குகள் மிக குறைவாக பதிவாகி உள்ளது. மேலும் மொத்தம் 136 சாலை விபத்துகளில் 203 பேர் காயமடைந்தனர். 16 பேர் உயிரிழந்தனர். சாலை பாதுகாப்பு விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டும் என்று 2,994 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது.
இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 1 லட்சத்து 11 ஆயிரத்து 555 வழக்குகள், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 821 வழக்குகள், அதிவேகத்தில் சென்றதாக 5,275 வழக்குகள், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தியதாக 10 ஆயிரத்து 129 வழக்குகள், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 58 ஆயிரத்து 276 வழக்குகள், இதர வழக்குகள் 85 ஆயிரத்து 808 உள்பட மொத்தம் 2 லட்சத்து 71 ஆயிரத்து 864 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.3 கோடியே 57 லட்சத்து 14 ஆயிரத்து 438 வசூலிக்கப்பட்டது. நீலகிரியில் 7 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பாலியல் குற்றம் சம்பந்தமாக 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 63 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து பள்ளிகள், கல்லூரிகள், பெண்கள் பணிபுரியும் இடங்கள் மற்றும் கிராமங்களில் 23 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ தெரிவிக்கலாம்.
2020-ம் ஆண்டில் குற்றங்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கவும் 1,160 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. காவல்துறை மூலம் பழங்குடியின மக்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் 351 சாதி சான்றிதழ்கள், 133 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெற்று தரப்பட்டது. வடகிழக்கு பருவமழையின்போது காவல்துறை சார்பில் 3 பேரிடர் மீட்பு குழு மற்றும் 12 குழுக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story






