என் மலர்
செய்திகள்

நீதிமன்றம்
5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
திட்டக்குடி அருகே 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வடகரை பகுதியை சேர்ந்தவர் முருகையன் மகன் மணிகண்டன் (வயது 26). தொழிலாளியான இவர் கடந்த 15.2.2019 அன்று அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் சக குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை தனியாக அழைத்துச்சென்றார். பின்னர் அந்த சிறுமியை சமுதாய நலக்கூடத்தில் உள்ள ஒரு அறைக்குள் வைத்து பூட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இது பற்றி அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது பற்றி சிறுமியின் தாய் விருத்தாசலம் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அதில், இவ்வழக்கில் மணிகண்டன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலைச்செல்வி ஆஜராகினார்.
Next Story






