search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காங்கிரஸ் பிரமுகர் வீட்டுக்குள் வெடிகுண்டுடன் புகுந்து ரூ.1 கோடி கேட்டு மிரட்டியவர் சிக்கினார்

    காரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டுக்குள் வெடிகுண்டுடன் புகுந்து ரூ.1 கோடி கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கற்பக விநாயகர் நகரை சேர்ந்தவர் மாங்குடி (வயது 50). காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மாவட்ட துணை தலைவராக இருக்கிறார். நேற்று காலை 6.30 மணி அளவில் அவரது வீட்டுக்கு, தமிழ் தேச மக்கள் என்ற கட்சியில் இருந்து வருவதாக தமிழ்குமரன் (40) என்பவர் வந்தார். எங்களது கட்சியை நடத்துவதற்கு பணம் தேவைப்படுகிறது. அதற்காக நீங்கள் 1 கோடி ரூபாய் தரவேண்டும்” என மாங்குடியிடம் கூறியுள்ளார். இதற்கு மாங்குடி மறுத்து உள்ளார்.

    உடனே தமிழ்குமரன், தான் கொண்டு வந்த பையில் இருந்து ஒரு பைப் வெடிகுண்டு, ஒரு நாட்டு வெடிகுண்டு, இரண்டு கத்திகள், ஒரு சுத்தியல் ஆகியவற்றை எடுத்துக் காண்பித்து, பணம் தராவிட்டால் அரசியல் முன்விரோதத்தை வைத்து கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது. அதோடு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்ததும் நாங்கள் தான் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாங்குடி, பணத்துக்கு ஏற்பாடு செய்வதாக அவரிடம் கூறி விட்டு வெளியே வந்து தனது நண்பர்களுக்கு செல்போனில் தகவலை தெரிவித்து வரவழைத்தார். அவர்கள் வந்ததும் தமிழ்குமரனை மடக்கி பிடித்து விட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே காரைக்குடி போலீசார் அங்கு விரைந்து வந்து தமிழ்குமரனை கைது செய்தனர். அவரிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×