என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு சென்ற சிறப்பு மலை ரெயிலையும், ரெயிலில் பணியாற்றும் பெண்களையும் படத்தில் கா
    X
    மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு சென்ற சிறப்பு மலை ரெயிலையும், ரெயிலில் பணியாற்றும் பெண்களையும் படத்தில் கா

    ஊட்டி மலை ரெயில் தனியார் மயமாக்கப்பட்டதா? - ரெயில்வே அதிகாரி விளக்கம்

    கூடுதல் கட்டணம், பணிப்பெண்கள் சேவையுடன் செல்லும் ஊட்டி மலை ரெயில் தனியார் மயமாக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. அதற்கு ரெயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.
    மேட்டுப்பாளையம்:

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் ஊட்டிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதி வழியாக, மலைப்பாதையில் இந்த ரெயில் செல்லும்போது இயற்கை காட்சிகளை கண்டு மகிழலாம். வளைந்து நெளிந்து செல்லும் இந்த பாதையில் மொத்தம் 208 வளைவுகளும், ஏராளமான பாலங்களும் உள்ளன. அத்துடன் 16 குகைகளும் உள்ளது.

    இந்த மலை ரெயிலில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து வந்தனர். முன்பதிவு வசதியுடன் உள்ள இந்த ரெயிலில் பயணிக்க மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பு கட்டணமாக ரூ.600-ம், குன்னூருக்கு ரூ.445-ம், 2-ம் வகுப்பு கட்டணமாக ஊட்டிக்கு ரூ.295-ம், குன்னூருக்கு ரூ.190-ம், முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிக்க ஊட்டிக்கு ரூ.175-ம், குன்னூருக்கு ரூ.110- வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர சில நேரங்களில் ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் சிறப்பு ரெயிலும் இயக்கப்படும். அந்த ரெயிலில் பயணிக்க முதல் வகுப்பு கட்டணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு ரூ.1,210-ம், ஊட்டிக்கு ரூ.1,575-ம், 2-ம் வகுப்பில் குன்னூருக்கு ரூ.815-ம், ஊட்டிக்கு ரூ.1,065-ம் வசூலிக்கப்படும். இந்த ரெயிலில் செல்லும் பயணிகளுக்கு உணவு மற்றும் டீ, காபி மற்றும் நொறுக்கு தீனிகளும் வழங்கப்படும்.

    இந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மலை ரெயில் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா குறைந்து வருவதால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன. இதனால் பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    எனவே ஊட்டி மலை ரெயிலையும் இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 5-ந் தேதி முதல் டி.என்.43 என்ற தனியார் நிறுவனம் சார்பில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இயக்கப்படுகிறது.

    இதனால் மலை ரெயிலின் முதல் வகுப்பு பெட்டியின் முன்பக்கம் ஆரஞ்சு நிறத்தில் டி.என்.43 என்ற வாசகம் எழுதப்பட்டு உள்ளது. அத்துடன் பக்கவாட்டில் உள்ள ரெயில் பெட்டிகளில் ஆரஞ்சு நிறத்தில் கோடுகளும் ஒட்டப்பட்டு உள்ளன. இந்த சிறப்பு மலை ரெயிலில் பயணம் செய்ய ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.3 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் இறுதிவரை இந்த தனியார் நிறுவனம் சார்பில் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    சாதாரணமாக மலை ரெயிலில் செல்ல இருந்த கட்டணத்தை விட சிறப்பு ரெயிலில் செல்ல பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளதால், சாதாரண பொதுமக்கள் இந்த ரெயிலில் செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்து உள்ளதுடன், இந்த ரெயில் தனியார் மயமாக்கப்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    மேலும் மலை ரெயிலை தனியாருக்கு விடப்பட்டு உள்ளதாக கூறி பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், இது தொடர்பாக போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப் பட்டு உள்ளன.

    இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயிலை தனியாரிடம் கொடுக்கவில்லை. இந்த சிறப்பு ரெயிலை யார் வேண்டும் என்றாலும் வாடகைக்கு எடுத்து இயக்கலாம். மேலும் பல முறை தனியார் நிறுவனங்கள் பணம் செலுத்தி சினிமா சூட்டிங்குக்கு எடுத்து உள்ளனர். அதுபோன்று வெளிநாட்டு தேனிலவு தம்பதிகளும் வாடகைக்கு எடுத்து உள்ளனர். இதற்காக ரெயில்வே நிர்வாகத்துக்கு ஒரு நாளுக்கு ரூ.4 லட்சத்து 93 ஆயிரத்து 500 வாடகையாக செலுத்த வேண்டும்.

    அவ்வாறு செல்லும் சிறப்பு ரெயிலில் 160 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு மேல் பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தற்போது சிறப்பு மலை ரெயில் கடந்த 5-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந் தேதி வரை மட்டுமே 13 டிரிப் இயக்கிக் கொள்ள தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    மலை ரெயிலில் 4 பெட்டிகள் இருக்கும். ஒரு பெட்டிக்கு 40 பேர் வீதம் 160 பேர் தான் பயணம் செய்ய முடியும். வாடகைக்கு எடுப்பவர் கள் அதிகம் பேரை ஏற்றக்கூடாது என்பதற்காக ரெயில்வே துறை சார்பில் பரிசோதகர்கள் மற்றும் பணியாளர்களும் அந்த ரெயிலில் செல்வார்கள். ரெயிலை இயக்குவதும் அரசுத்துறை டிரைவர்கள் தான்.

    தற்போது கொரோனா ஊரடங்கால் மலை ரெயில் இயக்கப்படவில்லை. ஆனால் தற்போது தனியார் மூலம் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. கொரோனா பீதி குறைந்து வழக்கம் போல அனைத்து ரெயில்களும் இயக்கப்படும் போது ஊட்டி மலை ரெயிலும் இயக்கப்படும். இது தவிர தனியார் மூலம் இயக்கப்படும் சேவைக்காக மற்றொரு ரெயில் உள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் மூலம் மலை ரெயில் இயக்கப்படுவதால் சாதாரண மக்கள் அதில் பயணம் செய்ய முடியாது என்று பொது மக்கள் கவலைப்பட வேண்டாம்.

    எனவே வழக்கமான ரெயில் சேவை தொடர்ந்து நடத்தப்படும். இதே போல மலை ரெயிலின் பெயரும் மாற்றப்படவில்லை. ஆனால் மலை ரெயிலில் வைக்கப்பட்ட தனியார் நிறுவன போர்டை அகற்ற சொல்லி உள்ளோம். இனி அந்த போர்டு இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிறப்பு மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து உள்ள ஊட்டியை சேர்ந்த முஜீப் கூறுகையில், சுற்றுலாவை மேம்படுத்தவே இந்த சிறப்பு மலை ரெயிலை இயக்குகிறோம். இதில் ஒரு கண்காணிப்பாளர் உட்பட 6 பெண்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பயணிகளுக்கு குடிநீர் பாட்டில், கட்லட், சமோசா மற்றும் எங்களது நிறுவன தயாரிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு ரெயிலில் பயணிகள் அமர்வதற்கு வசதியாக சொகுசு இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பயணம் செய்ய சிறப்பு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.3 ஆயிரம், நட்சத்திர விடுதியில் தங்க ரூ.5 ஆயிரம், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க ரூ.2 ஆயிரம், திரும்பி செல்லும்போது கோவை விமான நிலையத்தில் கொண்டு விட ரூ.2 ஆயிரம் என்று ரூ.3 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்றார்.
    Next Story
    ×