search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கடலூரில் கொத்தனார் அடித்துக் கொலை - வாலிபர் கைது

    கடலூரில் கொத்தனார் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 48), கொத்தனார். இவர் சம்பவத்தன்று புதுப்பாளையத்தில் உள்ள பொது கழிப்பறை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த அஞ்சாபுலி மகன் ராதாகிருஷ்ணன் (19) மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சாலையில் நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்த கிருஷ்ணமூர்த்தி, சாலையோரம் நிற்குமாறு கூறியதாக தெரிகிறது.இதில் ராதாகிருஷ்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியுடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் அவர் கிருஷ்ணமூர்த்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தியின் மகன் குமரவேல்(28), கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் கொலை முயற்சியின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். இதற்கிடையே கிருஷ்ணமூர்த்தி, மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

    இதனால் கொலை முயற்சி வழக்கை, போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே புதுப்பாளையம் பகுதியில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால், அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×