search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புதுக்கோட்டை மச்சுவாடியில் மூதாட்டியின் 12 பவுன் தங்க சங்கிலி திருட்டு

    புதுக்கோட்டை மச்சுவாடியில் பேன்சி கடையின் உரிமையாளரான மூதாட்டியின் 12 பவுன் தங்கச்சங்கிலியை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டை;

    புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வருபவர் கல்யாணி (வயது 65). இவர் நேற்று முன்தினம் கடையில் இருந்த போது, ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். ஒருவர் ஹெல்மெட் அணிந்தபடியும், மற்றொருவர் தொப்பியும் அணிந்திருந்துள்ளார். அப்போது கடையில் பொருள் வாங்குவது போல கல்யாணியிடம் பேச்சுகொடுத்துள்ளனர். அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பார்த்த மர்மநபர்கள் 2 பேரும், அவரிடம் சங்கிலியை இதுபோன்று அணியாதீர்கள், கழற்றி பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளனர். அவர்களது பேச்சை கேட்ட கல்யாணியும் 12 பவுன் தங்கச்சங்கிலியை கழற்றி மணி பர்சில் வைத்துள்ளார். அப்போது அதனை வாங்கி பாதுகாப்பாக தாள்களை சுற்றி வைக்கும்படி கூறி, அந்த மணிபர்சை, கடையின் பெட்டியில் வைப்பது போல நாடகமாடி மர்மநபர்கள் திருடிவிட்டனர். மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் சிறிது நேரத்திற்கு பிறகு மணிபர்சை பார்த்த போது அதில் நகைகள் இல்லாததை கண்டு கல்யாணி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் மர்மநபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது 2 பேரின் உருவம் பதிவாகி இருந்தது. ஆனால் முகம் தெரியவில்லை. அவர்களது மோட்டார் சைக்கிள் பதிவெண்ணை வைத்து விசாரித்த போது அது திருட்டு வாகனம் என தெரியவந்தது. இந்த நிலையில் மர்மநபர்கள் 2 பேரும் இதேபோல ஊர், ஊராக தொடர்ந்து கைவரிசையை காட்டி வந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இதே நபர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×