search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கண்மாய் நிரம்பி இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கண்மாய் நிரம்பி இருப்பதை படத்தில் காணலாம்.

    சிவகாசியில் 5-வது நாளாக மழை: 21 குடிசை வீடுகள் இடிந்து நாசம்

    சிவகாசியில் 5-வது நாளாக மழை பெய்தது. இதில் 21 குடிசை வீடுகள் இடிந்து நாசமானது. இவர்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நிவாரணம் வழங்கினர்.
    சிவகாசி:

    சிவகாசி பகுதியில் நேற்று 5-வது நாளாக மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் கிராமப்புறங்களில் இருந்த குடிசை வீடுகள் இடிந்து விழ தொடங்கியது. சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட அதிவீரன்பட்டியில் 5 குடிசை வீடுகளும், கொங்கலாபுரம், ஏ.மீனாட்சிபுரம், ஆனைகுட்டம், அனுப்பன் குளம் ஆகிய பகுதியில் தலா 1 குடிசை வீடுகள் என மொத்தம் 10 குடிசை வீடுகள் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் வெங்கடேஷ் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்றார். இதேபோல் நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு திருத்தங்கல், விளாம்பட்டி, மாரனேரி, விஸ்வநத்தம் ஆகிய கிராமங்களில் 11 குடிசை வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    வீடு இடிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் நிவாரண தொகை வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டது. வட்ட வழங்கல் பிரிவு சார்பில் அரிசி, மண்எண்ணெய், வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டன. இது குறித்து தாசில்தார் வெங்கடேசன் கூறியதாவது:-

    சிவகாசி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையால் இதுவரை 21 குடிசை வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. வீடு இழந்து தவித்தவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

    தாலுகா முழுவதும் உள்ள கண்மாய்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி செங்கமலப்பட்டி கண்மாய் முழுவதுமாக நிரம்பி உள்ளது. அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் வாடியூர் கண்மாய்க்கு செல்கிறது. திருத்தங்கல் பெரியகுளம் கண்மாய் 60 சதவீதமும், உறிஞ்சுக்குளம் கண்மாய் 70 சதவீதமும் நிரம்பி உள்ளது. சிவகாசி மற்றும் சுற்றுப்பகுதியில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 38 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×