search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை

    திருமாவளவனை அவதூறாக முகநூலில் பதிவிட்டவரை கைது செய்யக்கோரி சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு முகநூலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை பற்றி தவறான கருத்தை பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் சீர்காழி விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் தாமு இனியவன், வைத்தீஸ்வரன்கோவில் காவல்நிலையத்தில் திருமாவளவனை பற்றி தவறான கருத்தை முகநூலில் பதிவிட்ட செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு வைத்தீஸ்வரன்கோவில் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.

    ஆனால் இதுநாள் வரை காவல்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் பதரகுடி காமராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் ஸ்டாலின் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர்.

    பின்னர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்ற நிர்வாகிகள் அங்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் இல்லாததால் பணியில் இருந்த போலீசாரிடம் திருமாவளவன் பற்றி தவறான கருத்தை முகநூலில் பதிவிட்ட பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த செந்தில்குமாரை கைது செய்யவில்லை என்றால், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

    அப்போது பணியில் இருந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதன்பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×